தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வட்டி விகிதம் 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 44 ஆண்டுகளாக இல்லாத குறைப்பு. இதற்கு முன்பு 1978 இல் 8 சதவீதமாக இருந்தது. காலச் சக்கரத்தில் தொழிலாளியின் எதிர்காலத்தை கட்டி வைத்து பின்னோக்கி சுழற்றி உள்ளது ஒன்றிய பாஜக அரசு.
சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்ட விளை யாட்டுக்கு “பிட்ச்”சை தயார் செய்து தரும் ஏற்பாடு இது. பாதுகாக்கப்பட்ட சேமிப்பு வடிவங்களான - பி.எப், அஞ்சலக சிறு சேமிப்புகள், வங்கி சேமிப்பு போன்றவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப் படுவது பெரும் தொழிலதிபர்களுக்கு மலிவான மூல தனத்தை உருவாக்கித் தருவது மட்டுமின்றி ஊக முதலீடுகளை நோக்கி மக்களின் சேமிப்புகளைத் தள்ளுவதும் ஆகும்.
வட்டி குறைந்தாலும் மக்கள் எங்கே பங்குச் சந்தைக்கு போகிறார்கள்; நடுத்தர வர்க்கத்தின் ஒரு உயர் தட்டு பகுதியினர் மட்டும்தானே செல்கி றார்கள் என்று நினைக்கலாம். ஆனால் எளிய மக்கள் போகாவிட்டாலும் அவர்களின் சேமிப்பு கள் ஊக விளையாட்டுகளுக்கு அனுப்பப்படும். பி.எப் வட்டிக் குறைப்போடு இன்னொரு செய்தியும் சேர்ந்தே வலம் வருகிறது. அதாவது பி.எப் சேமிப்பு களில் இருந்து பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளின் வரம்பு அதிகரிக்கப்படும் என்பது தான். தற்போது உள்ள 15 சதவீத வரம்பு என்பது 25 சதவீதமாக எதிர்கால கூடுதல் நிதி வரத்துக ளில் மாற்றப்படும் என்பதே.
தற்போது பி.எப் நிதி மொத்தம் ரூ. 17 லட்சம் கோடி யாக குவிந்துள்ளது. 24 கோடி கணக்குகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ரூ.2.30 லட்சம் கோடி நிதி வரத்து உள்ளது. ஏற்கெனவே 15 சதவீதம், புதிய வரத்து களில் 25 சதவீதம் என்றால் எவ்வளவு பெரிய புதை யல் பங்குச் சந்தைக்கு வருகிறது பாருங்கள்.
இதனால் கூடுதல் வருமானம் சேமிப்புதாரர்க ளுக்கு கிடைக்குமாம். உண்மைக் காரணம் அதுவா? சூதாட்ட மேசையில் எதிரே உட் கார்ந்து இழப்பதற்கு ஆட்கள் இல்லாமல் எப்படி விளையாட முடியும் என்பதே. சில சிறு தொழில் அதிபர்களும் இயல்பாகவே வரவேற்கிறார்கள். அவர்களுக்கு உடனடி பயன் கிடைக்கலாம். ஆனால் தொலை நோக்கில் பெரு மூல தனத்தின் நலன்களே மிஞ்சும். சாமானிய மக்க ளுக்கு உடனடி பயனும் கேள்விக்குறிதான். எதிர் காலத்தில் பேரபாயம் நிச்சயம்.
இன்னொரு செய்தி. ஒன்றிய அரசின் குறு, சிறு தொழில் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் “கிரிப்டோ கரன்சி” தொடர்பான பிளாக் செயின் தொழில் நுட்ப பயிற்சியை இந்த மாதம் ஆறு நாட்கள் நடத்தப் போகிறது. சூதாட்ட வலை, சிறு தொழில்களை நோக்கி விரிகிறது என்பதற்கு சாட்சியம் இது.
இத்தகைய சீர்குலைவுகளுக்கு நவீன தாராளமய கட்டமைப்புக்கு உட்பட்டு தீர்வுகளை தேடினால் நீடித்த விடைகள் கிடைக்காது. மாற்றுப் பொருளாதாரப் பாதை பற்றிய விவாதங்கள் தேவை. நவீன தாராளமயம் வகுத்துள்ள எல்லை கள் உடைக்கப்பட வேண்டும்.