மோடியின் வாக்குறுதி மீது மக்களுக்கு முழுநம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருப்பது மக்கள் அல்ல; மாறாக பிரதமர் நரேந்திர மோடி தனக்குத் தானே நற்சான்றிதழ் கொடுத்துக் கொண்டு தானே கைதட்டி மகிழ்கிறார். அயோத்தியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய அவர், ஆண்டின் இறுதி என்பதால் வழக்கமாக தாம் கூறும் புனைகதை களை மேலும் பலமடங்காக விஸ்தரித்து விளம்பியுள்ளார்.
நாடு முழுவதும் 315 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு சுற்றுச்சுவருடன் நிற்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியு ள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளத்தை மட்டுமின்றி அவரவர் நிலத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கூட தாரைவார்ப்பதற்கு மசோதா தயாராக இருக்கிறது என்பதை மறைக்கிறார் இவர்.
12 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ள தாகவும் கூறுகிறார். 2014ஆம் ஆண்டு இவர் ஆட்சிக்கு வந்த போது சமையல் எரிவாயு உருளை விலை ரூ.400 லிருந்து ரூ.450 வரை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் ரூ.1200 தாண்டிவிட்டது. அதில் 200 ரூபாயை மட்டும் குறைத்துவிட்டு சகோதரிகளுக்கு நான் வழங்கியுள்ள ரக்சா பந்தன் பரிசு இது என்று சவடால் அடித்தார் பிரதமர். இணைப்பு மட்டும் தான் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் சேர்த்துத்தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க மாட்டார்களா?
வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் என்று புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறியுள்ளார். மறு புறத்தில் உலகின் மிகப்பெரிய பொதுத்துறை களில் ஒன்றான இந்திய ரயில்வே துறையை கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றி விட்டுக் கொண்டிருப்பதையும் சேர்த்து சொல்லியிருக்க வேண்டாமா? கொரோனா காலத்தில் பறிக்கப் பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை உள்பட பல சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வில்லை. இதுதான் மோடி வாக்குறுதியின் லட்சணம்.
நான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறை வேற்ற இரவு பகலாக கடினமாக உழைக்கிறேன் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவர் உழைக்கும் நேரத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இந்திய மக்களுக்கு புண்ணியமாக போகும். இவர் உழைக்க உழைக்க முதலாளி கள் மேலும் கொழுக்கிறார்கள்; ஏழை, எளிய மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறு கிறார்கள். பூத்துவரும் புத்தாண்டு இவரின் பொய் களுக்கு விடைதரும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.