headlines

img

மோடி அரசின் துரோகம்

இதுவரை இல்லாத மோசமான நிலை பாட்டை, பாலஸ்தீன விவகாரத்தில் மேற் கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை துவக்கியவுடனே, இந்தியாவின் நீண்ட கால வெளியுறவு கொள்கையை ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரி வித்து டுவீட் வெளியிட்டார். 

சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததன் மூலம் விமர்சன கணைகள் எழுந்த பின்னணியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சால்ஜாப்பு அறிக்கை மூலமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசுடன் பிரதமர் மோடியின் தொலைபேசி உரையாடலின் மூலமாகவும் சமாளிப்பு முயற்சி களை மேற்கொண்டது மோடி அரசு. 

ஆனால் இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை, அக்.28 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் அறி விக்க வேண்டும் என வலியுறுத்துகிற தீர்மானம் வந்தபோது, அதற்கு எதிராக, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த நிலைபாட்டின் மூலமாக நிரூபித்துவிட்டது மோடி அரசு. 

அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்ற ஆர்எஸ்எஸ்-பாஜக வின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன்  ஆட்சி நடத்துகிறார் இந்திய பிரதமர் மோடி.  இரண்டு அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு மதவாத மற்றும் இனவெறி பிடித்த ஆட்சியாளர்களும் ஒரே சிந்தனை போக்குடையவர்கள்; எதிரி களை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை அழித்தொழித்தல் எனும் கொடிய, பாசிச தன்மை கொண்ட சித்தாந்தத்தை தங்களது ஆட்சியின் கொள்கையாகவே அமல்படுத்துகிறார்கள்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான, இஸ்ரேலுக்கு ஆதரவான மோடி அரசின் நிலைபாடு இதை அப்பட்டமாக உணர்த்துகிறது. மோடி அரசு இந்த நிலைபாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பாலஸ்தீன மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். 

இஸ்ரேல், காசா மீதும் பாலஸ்தீனம் மக்கள்  மீதும் ஒரு கொடூரமான இனப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. 22 லட்சம் மக்கள் வாழ்கிற காசா நகரத்தையே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விட்டது. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் இன்னும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலையும் அதை இயக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தையும் வலுவாக நிர்ப்பந்திக்க வேண்டும்.