2021ஆம் ஆண்டு விடைபெற்று 2022 ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த புதிய ஆண்டில் துன்பங்கள் தொலைந்து இன்பம் விளைய வேண்டும் என்பதே உலக மக்களின் விருப்பமாக உள்ளது.
2019ஆம் ஆண்டின் பூவுலக மானுடத்தை அச்சுறுத்தத் துவங்கிய கொரோனா கொடுந் தொற்றின் பிடியிலேயே 2020 மற்றும் 2021 என இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எனினும் பெருந்தொற்று எனும் பெருநோயின் ஆபத்திலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. டெல்டா வைரசை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவும், தமிழகமும் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.
இந்த நோயின் தாக்கம் கூடுதலாக இருந்த போதும் தடுப்பூசி மூலம் ஒரு தடை அரணை ஏற்படுத்த அறிவியலால் முடிந்திருக்கிறது. தடுப்பூசி மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறையும், இந்நோயி லிருந்து மக்களை பாதுகாக்க உதவியுள்ளது. எந்த மருத்துவ முறை சிறந்தது என்ற சர்ச்சை ஒரு புறம் இருந்தபோதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு மட்டுமின்றி, அனைத்து நோய்களுக் கும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை கைக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
மனிதகுலத்தை அச்சுறுத்திய பல்வேறு கொள்ளை மற்றும் தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக மீண்ட அனுபவத்தை பாடமாகக் கொண்டு இந்த ஆண்டின் கொரோனா நோய்த் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவித்த முத லாளித்துவப் பொருளாதாரம் கொரோனா நோய்த் தொற்று மற்றும் முடக்கம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை க்கு உள்ளானது. அனைத்தையும் லாபநோக்கத்தி லேயே பார்க்கும் நவீன தாராளமயம் மக்களை நட்டாற்றில் விட்டது. வறுமை, வேலையின்மை அதிகரித்ததோடு பெரும்பகுதி மக்களின் வாழ்வா தாரம் சிதைந்துள்ளது. இந்த பொருளாதார முறை யால் மனிதகுலம் மீட்சி பெற முடியாது என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் சோசலிச நாடுகள் நோய்த் தொற்றை எதிர்த்து போராடியதோடு மக்களையும் பாதுகாத்தது. பெரு, ஹோண்டுரஸ், சிலி, என அடுத் தடுத்து லத்தீன்- அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் நல்ல செய்திகள் நம்பிக்கையளிக்கின்றன.
இந்திய விவசாயிகள் நடத்திய வீரமிகு யுத்தம் பெற்ற வெற்றி, அந்தோலன் ஜீவிகள் என்று போராளிகளை ஏகடியம் பேசியவர்கள் அலறித் துடிக்க போராட்டத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றிய மோடி அரசின் ஆணவத்தை அழித்து விவசாயிகளின் நெற்றி யில் வெற்றிப் பொட்டை வைத்து விடை பெறு கிறது 2021ஆம் ஆண்டு. இனி வரும் ஆண்டுகளு க்கு இது ஓர் இனிய துவக்கமாக அமையும். எல்லாரும் எல்லாமும் பெறுகிற ஒரு பொன்னு லகை நோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாய் அமையட்டும் வரும் ஆண்டு என்ற நம்பிக்கை யோடு புத்தாண்டை வரவேற்போம்.