headlines

img

அட்டூழியத்தின் உச்சம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தாண்டுக் கான முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் முற்றிலும் மக்களாட்சி மரபுக்கு எதிரானது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்திருப்பது அநாகரிகத்தின் உச்சம். அவர் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்திய அரசியல் சாச னத்தையும், இந்திய தேசிய கீதத்தையும் ஒருசேர அவமதிக்கும் பெரும் குற்றத்தை செய்துள்ளார்.  

மாநில அரசு தயாரித்த உரைக்கு ஆளுந ரும் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் அவை  துவங்கும் போது தேசிய கீதத்தை துவக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும், அதை மாநில அரசு ஏற்க மறுத்ததால் உரையை முழுமையாக வாசிக்க தமக்கு உடன்பாடு இல்லையென்றும் கூறியி ருக்கிறார். இது தன்னுடைய அட்டூழியத்திற்கு பொருத் தமற்ற ஒரு காரணத்தை கூறுவதே ஆகும். சட்டப் பேரவை துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும் போது தேசிய கீதமும் இசைக்கப்படுவதுதான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு.

அதன்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். இதிலிருந்து தேசிய கீதத்தை இழிவுபடுத்துவது அவர்தான் என்பது தெளிவாகிவிட்டது. ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள சில விசயங்கள் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை கூறுவதற்கு அவ ருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்படுவதே யன்றி இவருடைய சொந்தச் சரக்கிற்கான சுருக்குப் பை அல்ல. ஆளுநர் ஆர்.என்.ரவி இதை அறியாதவர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக தலைமையிலான மாநில அரசு அமைந்ததில் இருந்து இவருக்கு கருத்தியல் ஒவ்வாமை இருக்கிறது.  

அப்படியென்றால் அவர் தமது  பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சேவை செய்யப் போய்விடலாம். அதை விடுத்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் ஆளுநர் மாநில அரசின் செயல்பாடுகளை முடக்க முயல் கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை சீர்குலைப்பது பற்றியே சிந்திக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அவருடைய ஆணவப் போக்கு. கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானும் இப்படித்தான் சண்டித்தனம் செய்கிறார். இத்தகைய ஆளுநர்கள் போட்டி அரசியல் செய்ய நினைத்தால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் போட்டியிடட்டும். இல்லையேல் அரசியல் சாசன மரபை இழிவுபடுத்தாமல் இருக்கட்டும்.