ஒலிம்பிக் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அந்த அமைப்பின் விதிமுறை களை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அதேபோல் ஒரு நாட்டில் போர் நடைபெறுகிறது என்றால் அந்த நாட்டில் உள்ள ஒலிம்பிக் அணியினர் பாதுகாப்பாக போட்டியில் பங்கேற்கும் வகையில் ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு 7 நாட்கள் முன்பிருந்தே; மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு 7 நாட்கள் வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
ரஷ்யா தொடர்ந்து ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறுகிறது என்று கூறி சர்வதேச விளை யாட்டு போட்டிகளில் இருந்தும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட விளை யாட்டு வீரர்கள் தங்களது அரசாங்கத்தின் முடிவு களுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்பதால் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக்குழு, ரஷ்ய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் ரஷ்யா நாடாக அங்கீகரிக்கப்படமாட்டார்கள். அணிவகுப்பில் ரஷ்ய தேசிய கொடியை ஏந்திச் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போரை தீவிரமாக ஆதரிக்கும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட தகுதியற்றவர்கள். போரை ஆதரிக்கும் அல்லது போர் நடத்தும் நாடுகளை ஆதரிக்கும் எவர் ஒருவரும் போட்டியை பார்வையிடக் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் பாலஸ்தீனத்தின் காசா திட்டுப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்து அந்த பகுதியை சுடுகாடாக மாற்றியுள்ள இஸ்ரேலுக்கு மட்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவுக்கு ஒரு நியாயம், இஸ்ரேலுக்கு ஒரு நியாயமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இஸ்ரேலிய அணியில் போர் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக அந்நாட்டின் ஜூடோ வீரர் பீட்டர் பால்ட்சிக் வெளிப்படையாக போரை ஆதரிக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதலை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சர்வதேச அளவில் எதிர்ப்பு வந்த பின்னர்தான் அதை நீக்கினார்.
எனவே, பாரீஸ் ஒலிம்பிக்கில் இஸ்ரேல் மற்றும் போரை ஊக்குவிக்கும் அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், ஒலிம்பிக் போர் நிறுத்தம் என்ற உன்னத யோசனையை முற்றிலும் அர்த்தமற்ற தாக்கி விடும்.