நாட்டின் தலைநகர் தில்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 20வயது இளம்பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் காரால் மோதி பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப் பட்டு கொல்லப்பட்ட கொடுமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை விபத்து என்று கூறுவது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காவல்துறைக்கு இழுக்கு இல்லையா?
புத்தாண்டு தினத்தன்று போதிய கண்கா ணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்ய வில்லை என்று கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகிறது.
ஞாயிறன்று அதிகாலை 3.24 மணிக்கு காவல் துறைக்கு இந்த நிகழ்வு குறித்து முதல் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத் துக்குப் பின் தான் 4.40க்கு காவல்துறையினர் வந்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள தாக கூறிய தில்லி காவல் உதவி ஆணையர் ஹரேந்திரா சிங், தங்களுக்கு 4.11 மணிக்கு மற்றொரு தகவல் வந்ததாகக் கூறுகிறார். அந்த காரில் அதன் உரிமையாளர் இல்லை; அவரது நண்பர் கள்தான் சென்றனர் என்கிறார். அவர்கள் குடிபோ தையில் இருந்தார்களா என்பது பற்றி விசாரிக்கப் போவதாகக் கூறுகிறார். அந்தப் பெண் உடலில் ஆடை இருந்தது என்கிறார். பாலியல் பலாத்கா ரம் நடந்திருக்க வாய்ப்பில்லை; இது விபத்துதான் என்கிறார். அதுமட்டுமின்றி இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் யாருமில்லை என்றும் கூறுகிறார்.
அவரது கூற்றுக்கள் உணர்த்துவது என்ன? யாரைக் காப்பாற்ற முயல்கிறார். பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போதையில் கண்மண் தெரி யாமல் காரோட்டி உயிரிழப்பு ஏற்படுத்துவதை மறைக் கும் முயற்சியை காவல்துறை செய்யலாமா?
உயிரிழந்த பெண்ணின் தாயார், எங்கள் வீட்டில் வேலைக்குச் செல்லும் ஆள் என் மகள் தான். 10 மணிக்கு வீட்டுக்கு வருவேன் என்று கூறிச் சென்றவள் இறந்துவிட்ட செய்தி காலை யில்தான் தெரியும் என்று அரற்றுகிறார். அவரது கண்ணீருக்கு காவல்துறை கூறும் பதில் என்ன?
இந்நிலையில் தில்லி பெண்கள் ஆணையம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்தச் சாலையில் சோதனைச் சாவடிகள் எத்தனை? பல கி.மீ. ஓடியும் அந்தக் காரை காவல்துறையினர் தடுக்காதது ஏன்? அவர்கள் குடித்திருந்தார்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு ஜனவரி 5க்குள் பதி லளிக்க வேண்டுமென்று அறிக்கை கேட்டி ருக்கிறது.
இந்த சம்பவத்தை பார்த்தவர்தான் முதலில் தகவல் கொடுத்திருக்கிறார். அப்போதே காவல்துறை உடனடியாக செயல்பட்டிருந்தால் அந்த கார் 4,5 முறை அதே பாதையில் சென்று திரும்பி வந்திருப்பதை தடுத்திருக்க முடியும். ஒரு வேளை அந்த பெண்ணை காப்பாற்றியிருக்கக் கூட முடிந்திருக்கும். இதுதான் மோடி அரசின் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் லட்சணம் போலும்.