headlines

img

திசை திருப்பும் நடவடிக்கை!

    கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்து வர் கும்பல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை மூடி மறைத்து திசை திருப்பும் மம்தா அரசின் அனைத்து நடவ டிக்கைகளும் தோல்வியையே தழுவின. தற்போது மக்களின் கோபத்தை மடை மாற்ற  மேற்கு வங்க சட்டமன்றத்தில்  பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை  எனச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால்  மக்கள் நம்பத் தயாராக இல்லை. 

குற்றவாளிகளை தண்டிப்பதில் உண்மையி லேயே அக்கறை இருக்குமானால், எதற்காக முதலில் பாலியல் வல்லுறவு கொலையை தற்கொலை எனக் கூற வேண்டும்? குடும்பத்தி னரை அல்லாட விட்டதோடு, சாட்சியங்களை ஏன் அழிக்க முயற்சிக்க வேண்டும்? பொறுப் பாக்க வேண்டிய ஆர்.ஜி.கர் கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே எதற்காக அவரை தேசிய மருத்துவக் கல்லூரி யின் முதல்வராக நியமிக்க வேண்டும்? 

மேற்கு வங்கத்தில் அரசால் நடத்தப்பட்டு வந்த அனைத்து அரசு  மருத்துவமனைகளும் இன்று “ஜன் கல்யாண் சமிதி” எனும் குழுவால் நடத்தப்படு கிறது. இந்த குழுவில் உள்ள பெரும் பகுதியினர் திரி ணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். வழிநடத்தும் தலைமைப் பொறுப்புகளும் அவர்களுக்குத்தான். மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கிய கும்பலும் இந்த குழுவினரால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்தான்.   

மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின் நடை பெறும் முதல் பாலியல் வல்லுறவு கொலையல்ல இந்த சம்பவம். 2012ஆம் ஆண்டில் கொல்கத்தா வின் ‘பார்க் ஸ்ட்ரீட்’டில்  ஓடும் காரில் ஒரு பெண் கும்பல் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார். அதனை இதே மம்தாதான் ஜோடிக்கப் பட்ட சம்பவம் என இழிவு படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பிற்குப் பின்னர் பின்வாங்கினார். 

அதற்கடுத்த வருடம் காம்துனியில் 20 வயது கல்லூரி மாணவியை 8 பேர் கும்பல் வல்லுற விற்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர். அந்த சம்பவத்திலாவது குற்றவாளிகளுக்கு மம்தா அரசு கடும் தண்டனை பெற்றுத் தந்ததா? இல்லை.  குற்றவாளிகளின் தண்டனையை மன்னிக் கும் விதமாக மம்தா அரசு நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்திற்கு உள்ளா னதும் நாடறிந்ததே. 

அவ்வளவு ஏன், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரத்தின்படி மேற்கு வங்கத்தில்  2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 34,738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  பாலி யல் வன்கொடுமை வழக்குகள் 1111 பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தேசிய சராசரி 65.4 சதவிகிதம். ஆனால் மேற்கு வங்கத்தில் 71.8 சதவிகிதம். இந்த லட்ச ணத்தில், ‘மரண தண்டனை’ நாடகம் யாரை ஏமாற்ற?