ஜவுளி உற்பத்திக்கு ஆதாரமான பருத்தி நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. இது சிறு, குறு உற்பத்திப் பிரிவினரை வாழ்வா, சாவா என்ற நெருக்கடி நிலைக்குள் தள்ளியுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நிகழ்த்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, அங்கு விளை யும் பருத்திக்கு அமெரிக்கா தடை விதித்ததுதான் இப்பிரச்சனைக்கு மூல காரணம். உண்மையில் உய்கூர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல் இல்லை என இஸ்லாமிய நாடுகளின் கூட்ட மைப்பினர் நேரில் அங்கு சென்று பார்த்து வந்து வெளிப்படையாக அறிவித்தனர். எனினும் அமெ ரிக்கா தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. சீனாவுடன் நேர்மையாக போட்டியிட முடியாமல் அமெரிக்கா நடத்தும் இழிவான வர்த்தகப் போரின் ஒரு பகுதியே பருத்திக்குத் தடை விதிப்பாகும்.
அமெரிக்காவின் பொறுப்பற்ற, தன்னிச்சை யான நடவடிக்கையால் சர்வதேசச் சந்தையில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அது இங்கேயும் பாதித்துள்ளது. உண்மையில் இந்தி யாவில் உள்நாட்டுத் தேவைக்கு அதிகமாகவே பருத்தி விளைகிறது. ஆனால் ஆட்சியாளர்களின் கண்மூடித்தனமான உலகமய, தாராளமயக் கொள்கை காரணமாகவே சர்வதேசச் சந்தை விலை உயர்வின் பாதிப்பை உள்நாட்டுச் சந்தையில் ஜவுளித் தொழில் துறையினர் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
“சர்வதேசச் சந்தை விலை காரணமாக உள்நாட்டுப் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது, இதில் நாங்கள் தலையிட முடியாது” என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இது உண்மையைத் திரித்துக் கூறுவ தாகும். விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் வேண்டும் என்று விவசாயிகள் இப்போதும் தில்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லாத ஆட்சியாளர்கள்தான், பருத்தி விவசாயிகளுக்கு தற்காலிகமாக கிடைக்கும் சொற்பத் தொகையைக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு, கார்ப்பரேட் வர்த்தகச் சூதாடிகளின் அபரிமித கொள்ளைக்கு வழி ஏற் படுத்தித் தருகிறார்கள்.
மற்றொருபுறம், சர்வதேச நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி பிரிவினர் மூச்சுத் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு குறு ஜவுளித் தொழில், தொழிலாளர் வேலைவாய்ப்பு, நகர்ப்புற, கிராமப்புற சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பைச் சந்திக்கின்றன.
உழவுக்கும், தொழிலுக்கும் நிந்தனை செய்து, வீணில் உண்டு களிக்கும் வர்த்தக சூதாடிகளுக்கு வந்தனை செய்வதே ஆட்சியாளர்கள் கடைப் பிடிக்கும் தவறான கொள்கைகளின் அனுபவம். நூல் விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் இந்த தாராளமயக் கொள்கை அரசியலைப் புரிந்து கொள்ளாத வரை, இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. ஜவுளித் துறையினர் போராட்டக் களம் காண்பதே மாற்றத்திற்கான புது வழியை காட்டும்!