தமிழக பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதியளிக்கும் விசயத்தில் காவல்துறையும், பாஜகவினரும் ஓடிப்பிடித்து விளையாடும் சிறுவர்களைப் போல நடந்து கொள்கின்றனர். வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டாலும் அன்றாடம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேல் யாத்திரை என்கிற பெயரில் சட்டம்- ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பாஜக தலைவர் முருகன், எச்.ராஜா உள்ளிட்டவர்கள் யாத்திரையை துவங்கி நடத்துவதும், அவர்களை காவல்துறை கைது செய்வதாகஅறிவித்து திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பதும் அடுத்தநாள் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தபடி அடுத்த ஊரில் யாத்திரையை துவங்குவதும் நடந்து வருகிறது. பாஜகவினரின் வேல் யாத்திரைக்கும், பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகபக்தர்கள் அன்றாடம் கோயில்களில் வழிபாடுசெய்கின்றனர். அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் இவர்கள் முழுக்க முழுக்க பிளவு அரசியலை முன்னெடுப்பதற்காகவே இந்த யாத்திரையை நடத்துகின்றனர். இந்த யாத்திரையின் போது அவர்களது பிற்போக்கு அரசியலே முன்வைக்கப்படுகிறது. இந்த யாத்திரைக்குப் பிறகு பாஜக பெருமளவில் வளர்ச்சியடையும் என்றும்பெரிய கட்சிகள் காணாமல் போகும் என்றும் வெளிப்படையாகவே பேசுகின்றனர். இதிலிருந்தே அவர்கள் நடத்துவது சுயநல யாத்திரைதான் என்பது புலனாகும்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாஜகவினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி தாக்கல் செய்துள்ள மனுவில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றும், பாஜகவினர் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர் என்றும் இது அரசியல் யாத்திரையே என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழகமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சட்டம் - ஒழுங்கை கையிலெடுத்துக் கொண்டுசெயல்படும் பாஜகவினரை தடுக்க காவல்துறைஎடுத்த நடவடிக்கை என்ன என்பதுதான் கேள்வி.இந்த யாத்திரையை அனுமதித்தால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு தெரிவித்தது. மேலும் சட்டம்- ஒழுங்குபாதிக்கப்படும் எனவும் கூறியது. ஆனால் தொ டர்ச்சியாக யாத்திரை நடத்தவில்லை என்பதைத் தவிரபாஜகவினர் ஏற்கெனவே அறிவித்தபடி அந்தந்தஊர்களில் கூடி யாத்திரை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று காலத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு எந்தளவுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டது என்பதையும், வியாபாரிகள், எளிய மக்கள் எந்தளவுக்கு மோசமாக நடத்தப்பட்டனர் என்பதையும் நாடறியும். இந்தகலவர யாத்திரையை தடுத்துநிறுத்த அதிமுகஅரசுக்கு அரசியல் உறுதி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பாஜகவினரின் அடாவடிஆட்டத்திற்கு மாநில அரசும் துணைபோவது மிகவும் ஆபத்தானது.