headlines

img

மாநில உரிமைகள் மீது மற்றுமொரு தாக்குதல்

நாடு முழுவதும் இளநிலை மற்றும் முது நிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அனைத்தையும் பொதுக் கலந்தாய்வு மூலம் தேசிய மருத்துவ ஆணையமே நிரப்பும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள் ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளில் தலையிடும் போக்கு என்பதோடு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை படிப்படியாக ஒழித்துக் கட்டவும் வழி வகுக்கும் ஆபத்தான திட்டமாகும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

அனைத்து மருத்துவப் படிப்பிற்கான இடங்களையும் நீட் மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப் போவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான சுற்ற றிக்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோ சிக்காமல் இந்த முடிவை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுத்துள்ளது.

தற்போது இளநிலை மருத்துவப் படிப்புக ளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சத வீதமும், முதுநிலை படிப்புகளுக்கு 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநில அரசுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அகில இந்திய ஒதுக் கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ள நிலையில், மொத்த இடங்களையும் ஒன்றிய அரசு கபளீகரம் செய்ய முயல்கிறது. 

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு மறுத்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கிலும் தன்னுடைய சமூக நீதிக்கு எதிரான நிலை பாட்டை ஒன்றிய அரசு நியாயப்படுத்தியது.

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றிய அரசு கலந்தாய்வு மூலமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள முயல்கிறது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடும் பின் பற்றப்படுவதோடு பட்டியல் பிரிவு மாணவர்களுக் கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடும், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்க்கு உள் ஒதுக்கீடும் உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்க ளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் அவர்களுக்கு மாநிலஅரசே கட்டணம் செலுத்தும் முறையும் உள்ளது. இது அனைத்தும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு விசயத்தில் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.  ஒன்றிய அரசின் சதிக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ்நாடும் அணி திரள வேண்டும்.