புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத் தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குடிநீரில் மலத்தைக் கலந்திருந்த கொடூரம் வன்மத்தின் உச்சம். மனித சமூகத்தின் அநாகரீகம். சமூக அழுக்குகளில் சீழ் பிடித்த நச்சுக் கிருமிகளாக இன்றளவும் சாதியத்தின் பிடி கெட்டிதட்டிப் போய் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான தலையீடும், மாவட்ட நிர்வாகத்தின் உறுதியான நடவடிக்கையும் பட்டியலின மக்களுக்குச் சற்று ஆறுதலை அளித்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல, கால மாற்றத்திற்கேற்ப தீண்டாமையின் வடிவங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் முற்றிலுமாக ஒழிய வுமில்லை, ஒழிக்கப்படவும் இல்லை.
இறையூர் கிராமத்தில் ஆட்சியர் கவிதாரா முவின் நேரடி நடவடிக்கை மூலம், பட்டியலின மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, இரட்டைக் குவளை முறை என தீண்டாமை இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை வரவேற்புக்குரியது. அதே நேரம் இந்த முயற்சியும், நடவடிக்கையும் தொய்வின்றி தொடர வேண்டும். புதுக்கோட்டை மட்டுமல்ல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர வேண்டும்.
சேலம் மாவட்டம் விருதாசம்பட்டியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்க ளுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. பேச்சு வார்த்தையின் போது , முடிவு எட்டாத நிலை யில் வருவாய்த் துறையும், காவல்துறையும் கோவி லுக்குப் பூட்டுப் போட்டிருக்கின்றனர். பூட்டுப் போடுவதும் ஒரு விதத்தில் வழிபாட்டு உரிமையை மறுப்பதன் மறுவடிவமாக மாறிவிடும். அரசு நிர்வா கம் உறுதியாக நின்று பட்டியலின மக்களின் வழி பாட்டு உரிமையை நிலை நாட்டுவதே சமூக நீதிகாக்கும் அரசாகச் சிறக்கும்.
தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசே புள்ளி விபரங்களை அளித்திருக்கிறது. 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதத்தில் தமிழகத்தில் ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மொத்தம் 212 விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியிருப்பது வரவேற்புக்குரியது.
ஆனால் இந்த நடவடிக்கை மட்டும் சாதிய ஆதிக்க கட்டமைப்பை அடியோடு அகற்றிடாது. சமூக வாழ்நிலையே சமூக உணர்வைத் தீர்மா னிக்கின்றது. உற்பத்தி உறவுகள் மனிதர்களின் சிந்தனைகளில் சாதிய உணர்வை ஊக்கு விக்கிறது. உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட முன்னேற் றம், அது உற்பத்தி உறவுகளில் ஏற்படுத்திய மாற்றங் கள் பல இடங்களில் தீண்டாமையைத் தகர்த் தெறிந்திருக்கின்றன.
தீண்டாமை என்பது வெகுமக்களின் பொரு ளாதாரச் சார்புநிலையுடனும் தொடர்புடையதா கவே இருக்கிறது. எனவே தீண்டாமையை ஒழிப்ப தில் அரசியல், பொருளாதார, சித்தாந்தப் போராட் டமும் அவசியம். அதற்கேற்ற வகையில் விழிப்பு ணர்வு பிரச்சாரமும் அமைந்திட வேண்டும்.