விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தீக்கதிர் தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் படைத் தளபதிக்கு வர்க்கப் போரின் ஈட்டி முனையான தீக்கதிர் தன்னுடைய புகழஞ்ச லியை காணிக்கையாக்குகிறது.
1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த அவர், 2023ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி மறைந்தார் என்பது அவரது வாழ்க்கை குறித்த வரலாற்றுக் குறிப்பு. ஆனால் 102 ஆண்டுகளுக் கும் மேலாக நிறை வாழ்வு வாழ்ந்த அவர் தன் ஒவ்வொரு சுவாசத்தின் போதும் இந்த மண்ணை, மக்களை, புரட்சியை நேசித்தார் என்பதே அவரது வர்க்க வாழ்வின் வரையறுப்பு.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது, படிப்பைத் துறந்து விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் 18 மாதங் கள் கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டார். தன் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் சிறையிலும், நான்கு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை யிலும் தோழர் சங்கரய்யா இருந்தார். மதுரை சதி வழக்கு என்ற புனையப்பட்ட பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை, நாடு விடுதலை பெறுவதற்கு முதல் நாள்தான் சிறையி லிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது அவரது தியாக வாழ்விற்கு சாட்சியம் ஆகும்.
தமிழக சட்டப் பேரவைக்கு 1967, 1977, 1980 என மூன்று முறை தேர்வு செய்யப்பட்ட அவர், பேர வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கார நாத மாக கர்ஜித்தார். குரலற்றவர்களின் குரலாய் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அவரது நாவு அசைந்து நர்த்தனம் புரிந்தது.
தன்னுடைய மாணவப் பருவத்திலேயே பொ துவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்ட செயலாளராகவும், தேசி யக் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டு பணியாற்றியவர்.
1964 ஆம் ஆண்டு, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்திலும், இந்திய அளவிலும் வேரூன்றி வளர்க்க களம் பல கண்டவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளராகவும், மத்தியக்குழு உறுப்பினராகவும், மத்தியக் கட்டுப்பாட்டு குழு வின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், மாநிலச் செயலாளராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவ ராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றி ஏர் முனையை போர் முனையாக மாற்றிய மகத்தான போராளி தோழர் என்.சங்கரய்யா ஆவார்.
1963ஆம் ஆண்டு தீக்கதிர் ஏடு துவங்கப்பட்ட போது, புனை பெயர்களில் கட்டுரை எழுதி வந்த வர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உதயமான பிறகு கட்சியின் அதிகா ரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது அதன் முதல் ஆசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
செம்மலர் இலக்கிய மாத ஏடு உருவாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உரு வாகவும் காரணமாக அமைந்தவர்களில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர்.
வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடை வெளி இல்லாமல் வாழ்ந்த முன்னுதாரணமான கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்தவர். திசைகளின் தசைகளில் தீப்பிடிக்க வைக்கும் அபாரமான ஆற்றல் கொண்ட பேச்சாளர்.
கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களின் குடும் பங்களோடு தம்மை நெருக்கமாக பிணைத்துக் கொண்டிருந்த அவர், அந்த குடும்பங்களின் தலைவராக இருந்து வழி நடத்தியவர். தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை உருவாக்கி முதல் விருதை சங்கரய்யாவுக்கு வழங்கி பெருமை சேர்த்துக் கொண்டது. தோழர் சங்க ரய்யா ஒரு சகாப்தம். செங்கொடி இயக்கத்தின் பெருமிதம். அவர் புகழ் நிலத்தில் நீடு வாழும்.