ரெய்க்யவிக் ஒபன் 2022 செஸ் போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். '
ஐஸ்லாந்தில் நடந்த ரெய்க்யவிக் ஓபன் செஸ் போட்டியில் இளம் கிராண்ட்மாஸ்டரும், தமிழகத்தை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, வெற்றி பெற்றுள்ளார். சுமார் 245 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது.
இறுதிச்சுற்றுக்கு முன்னதாக மேக்ஸ் வார்மர்டாம், ஆண்டர்சன், பிரக்ஞானந்தா ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தனர். அதேபோல குகேஷ், அபிமன்யு மிஸ்ரா மாதிரியான வீரர்களும் புள்ளிகளில் நல்ல முன்னிலை பெற்றிருந்தனர்.
இருப்பினும், இறுதிச்சுற்றில் சக இந்திய குகேஷுக்கு எதிராக அற்புதமான நகர்வுகளை பிரக்ஞானந்தா முன்னெடுத்து வைத்தார். இதன்மூலம் அவர் தனது பட்டியலில் 1 புள்ளியை சேர்த்தார். இதில் மொத்தமாக 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று பட்டம் வென்றார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி செஸ் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம் வயதிலேயே சாதனை படைத்தார். இதன்மூலம், உலக செஸ் அரங்கை தன்பக்கம் கவனம் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.