games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

இங்கிலாந்து சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8-வது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகின் பாரம்பரிய மைதானமான மேல்போர்னில் ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் (வேகம்) மற்றும் அடில் ரஷீத் (சுழல்) ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் கடுமையாக திணறினர். கிட்டத்தட்ட முதல் 12 ஓவர்களிலேயே மிடில் ஆர்டரை இழந்தது பாகிஸ்தான். கேப்டன் பாபர் அசாம் (32), மசூத் (38) ஆகியோரின் நிதான ரன் குவிப்பால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.  138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானை போலவே தொடக்கத்தில் திணறியது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (52) பாகிஸ்தான் அணியின் மிக கொடூரமான பந்து வீச்சு தாக்குதலில் இருந்து கடுமையாக போராடி விக்கெட் சரிவை தடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை (138 ரன்களுடன்) எளிதாக எட்டி கோப்பையை கைப்பற்றியது.  இங்கிலாந்து அணிக்கு இது 2-வது டி-20 உலகக்கோப்பையாகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து உலகக்கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் சாதித்த பட்லர்

எவ்வித உணர்ச்சி வெளிப்பாடு, கோபம், பதற்றம் என கேப்டனின் வெளிப்படையான அடையாளம் எதுவுமின்றி  இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ஜோஸ் பட்லர். கேப்டன் பொறுப்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று செயல்பட்டுள்ளதால் ஜோஸ் பட்லருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பட்லரை போலவே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிக சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.12 கோடி

சாம்பியன் பட்டம் வென்ற  இங்கிலாந்து அணி கோப்பையுடன் ரூ.12 கோடி பரிசுத்தொகை வென்றது. 2-ஆம் இடம்  பிடித்த பாகிஸ்தான் அணி ரூ.6 கோடியும், அரையிறுதியில் வெளியேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி களுக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதுபோக சூப்பர் 12  சுற்று மற்றும் தகுதி சுற்றில் வெளி யேறிய அணிகளுக்கு ரூ.32 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பேட்டிங்  சொதப்பலால் தோற்ற பாகிஸ்தான்

பலமான பேட்டிங் ஆர்டர்  இருந்தும் தொடக்கத்திலே யே மிடில் ஆர்டர் சரிந்ததால் ரன் குவிப்பில் ஈடுபட முடியாமல் கடுமையாக  திணறிய பாகிஸ்தான் அணி வெறும்  137 ரன்கள் எடுத்தது தான் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் திறம்பட செயல்பட்டு வெற்றிக்காக கடுமையாக போராடினர். ஆனால் குறைந்த அளவு ரன் எண்ணிக்கை என்பதால் அவர்களது போராட்டம் வீணானது. 

பீல்டிங் படுமோசம்

பேட்டிங் ஒரு பக்கம் கைகொடுக்கவில்லை என்றாலும் பந்துவீச்சு கைகொடுத்தது. ஆனால் பீல்டிங் சொதப்பலால் நிறைய கேட்ச்கள், ரன் அவுட் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டது. பேட்டிங்கை  விட பாகிஸ்தானின் பீல்டிங் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.