ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும், டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ரோகித் சர்மாவை ஒருநாள் தொடரின் கேப்டனாக்குவதற்கு அணி தேர்வாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவு குறித்து விராட் கோலியிடமும் பேசப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம், கோலியிடம் 20 ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் 20 ஓவர் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், இரண்டு வெள்ளை பந்து வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். எனவே ஒருநாள் தொடரில் ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது.
ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார். இந்திய கிரிக்கெட் சிறந்த வீரர்களின் கைகளில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். வெள்ளைப்பந்து வடிவத்தில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.