நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு 100 சதவீதம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. ப்ரிதிவ் ஷா 37 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டதால் ஒபட் மெக்காய் வீசிய முதல் 3 பந்துகளிலும் ரோவ்மன் பவல் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் நோபால் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர்கள் நோ பால் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பான ரிஷப் பந்த், களத்தில் இருந்த பவல், குல்தீப் யாதவை உடனடியாக வெளியேறச் சொன்னார். இதனால் ஆட்டத்தில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் உதவிப் பயிற்சியாளரான பிரவின் ஆம்ரே, மைதானத்திற்கு உள்ளேயே வந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் நடுவர்கள் ஆம்ரேவை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள்.
இதையடுத்து, நடுவர்கள் பேட்ஸ்மேன்களை சமாதானப்படுத்திய பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அடுத்த 3 பந்துகளை எதிர்கொண்ட ரோவ்மேன் பவல், இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் ஏற்பட்ட நோ பால் சர்ச்சையால், ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்க்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீத அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.