games

img

ஆசியக் கோப்பை டி20 போட்டி நடைபெறும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். அதன்படி 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன. 

ஆனால், ஆசியக் கோப்பைப் போட்டி என்பது 9 நாடுகள் பங்கேற்கக் கூடியது. எனவே, அணிகளின் எண்ணிக்கை, எரிபொருள் பற்றாக்குறை, பலவீனமான பொதுப் போக்குவரத்து, தனியார் வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள இந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் விளையாடுகின்றன. 

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை ஏழு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

;