games

img

மோசமான தலைமையை புறக்கணிப்போம் - இலங்கை மக்களுக்கு ஹசரங்க அழைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, இலங்கை மக்களுக்கு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக நேற்று இரவு இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் சிறந்த தேசமாக திகழ்ந்த நாம் எப்படி வீழ்ந்தோம்.

இலங்கை மக்களின் மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு தற்போது, அழுகை மற்றும் துயரமாக மாறியுள்ளது. நாம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். தேசமாக ஒன்றுப்பட்டு, சரிவிலிருந்து மீண்டு வர வேண்டும். இலங்கையே விழித்துக்கொள், நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம். மோசமான தலைமையை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளார். 

அதேபோல், இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையர்களான நாம் கடந்த மாதம் அமைதியாக ஒன்றாக அவதிப்பட்டோம். அனைத்திற்கும், அனைவருக்கும் பொறுமை இழக்கும் கட்டம் இருக்கிறது. நாம் அந்த கட்டத்தை எட்டிவிட்டோம். நேற்றைய போராட்டம் அப்பாவி மக்களின் துன்பம் மற்றும் நியாயமற்ற அடக்குமுறையின் வெளிப்பாடு. இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியல் அடிப்படையில் இனி நாம் பிளவுப்படக்கூடாது. ஒரே மக்கள் என்ற அடிப்படையில் நான் ஒன்றிணைய வேண்டும். அமைதியாகப் போராடுங்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் மற்றும் தயவுசெய்து சக சகோதரர்கள் அல்லது சகோதரிகளைக் காயப்படுத்த வேண்டாம் என சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.