4:43 மணி நேரம் போராட்டம் டென்னிஸ் உலகை கவனிக்க வைத்த அல்காரஸ் - ஜோகோவிச்
பாரம்பரியமிக்க டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 20 வயது இளம் வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 4:43 மணி நேரம் போராடி, செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். அல்காரஸ் - ஜோகோவிச் மோதிய இறுதி ஆட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. சர்வீஸ் முதல் ஸ்மார்ட் ஷாட்களில் இருவரும் போராட்ட குணத்தை காட்ட ஆட்டம் 4 மணிநேரம் நகர்ந்ததே தெரியவில்லை.
சர்வீஸ் மட்டுமே...
இறுதி ஆட்டத்தில் சர்வீஸ் மட்டுமே பிரதான பிளஸ் பாயிண்ட்டாக வைத்து அல்காரஸ் - ஜோகோவிச் விளையாடியுள்ளனர். அதாவது இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் சர்வீஸ் மூலம் திணறடித்து புள்ளிகளை குவித்துள்ளனர். இதில் ஜோகோவிச் சர்வீஸில் மிரட்டினார். 120 கிமீ வேகத்திற்கு அதிகமாக பிரம்மாண்ட ஏசஸ்களை (தொடாமல் விலகும் சர்வீஸ்) போட்டு அல்காரஸை திணற வைத்தார். அல்காரஸ் அதிரடி மற்றும் டிராப் ஷாட்கள் மூலம் வெற்றிப் புள்ளிகளை குவித்து அசத்தினார்.
இந்த பழக்கத்தை இன்னும் விடவில்லை...
கடைசி செட்டில் (5) அல்காரஸ் ஆதிக்கத்தை ஜோகோவிச்சால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோகோவிச் தனது ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) நெட் கம்பியில் அடித்து நொறுக்கினார். இது விதிமீறல் செயல் என்றாலும், இதுதொடர்பான நடவடிக்கை குறித்து இன்னும் விம்பிள்டன் நிர்வாகம் அறிவிக்கவில்லை. 36 வயதாகி, 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலகின் தலைசிறந்த வீரர் என்ற சிறப்பு ஜோகோவிச்சிடம் இருந்தாலும், இன்னும் ராக்கெட்டை உடைக்கும் பழக்கத்தை அவர் விடவில்லை. 20 வயது அல்காரஸ் கோபம், சந்தோசம் என எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் சமத்துப் பிள்ளையாக விளை யாடியது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும்
பொதுவாக விளையாட்டு உலகில் நாடு, பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் விம்பிள்டனில் அப்படி இல்லை. எந்த நாட்டு வீரர், வீராங்கனைகளாக இருந்தாலும், தனக்கு பிடித்த வீரர், வீராங்கனைகளாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடினால் கைத்தட்டலுடன் பாராட்டு தெரிவிப்பார்கள். இந்த ஊக்குவிப்பால்தான் விம்பிள்டனில் விளையாடும் வீரர், வீராங்கனைகள் மிகப்பெரிய நட்சத்திரங்களாக வளருகின்றனர். ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - அல்காரஸ் ஆகிய இருவருக்கும் ரசிகர்கள் சரிசமமாக ஆதரவு அளித்தனர்.
மழையில்லாமல் பூக்களில்லை..
பொதுவாக டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் டாட்டூ (பச்சை) இட்டுக்கொள்வதில்லை. சாதாரணமாகத் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது நிறைவுபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற செக்குடியரசின் வென்டரஸ்சோவா இரண்டு கைகளிலும் டாட்டூ குத்தியிருந்தார். அதுவும் சற்று வித்தியாசமாக. பூக்கள், பறவைகள், தேவதைகள் சிறிய அளவில் இருந்தன. அனைத்து டாட்டூக்களும் பென்சிலில் வரையப்பட்டுள்ளது போன்று மிக அழகாக இருந்தன. வென்டரஸ்சோவாவின் டாட்டூக்களில் மிக முக்கியமானதாக இருந்தது மழையில்லாமல் பூக்களில்லை (NO RAIN NO FLOWERS) என்ற விழிப்புணர்வு வாசகம்தான். தற்போதைய சூழ்நிலையில் வென்டரஸ்சோவாவின் டாட்டூ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விம்பிள்டன் சாம்பியன்கள்
மகளிர் ஒற்றையர் : வென்டரஸ்சோவா (செக்குடியரசு)
ஆடவர் இரட்டையர் : வெஸ்லி (நெதர்லாந்து) - நீல் (பிரிட்டன்)
மகளிர் இரட்டையர் : ஸ்டரைகோவா (செக்குடியரசு) - சு வெய் (சீன தைபே)
கலப்பு இரட்டையர் : பவிச் (குரோஷியா) - கிச்சேநோக் (உக்ரைன்)