இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை டி20 போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசிய கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் 2022 ஆசிய கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சனைகளால் போட்டியை அங்கு நடத்த இயலாத நிலை இருப்பதாக மும்பையில் செய்தியாளர்களிடம் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது.
இதனால், கொழும்பில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் ஆட்டம் கொழும்பிலிருந்து காலேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதிவரை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை பெய்யாத இடம் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதற்கு காரணம் என்றும் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.