ஆன்டிகுவா, பிப்.6- மேற்கிந்திய தீவுகளில் 14-வது ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜனவரி 14 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெற்றது. பிப்ரவரி 5-ம் தேதி ஆன்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
இதனையடுத்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் சேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் திரட்டினர். ஜேம்ஸ் ரீவ் 95 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சுலப இலக்கு இதன்பின்னர் 190 ரன்கள் வெற்றி என்ற சுலப இலக்குடன் இந்திய அணி விளையாடியது. எனினும், தொடக்க வீரரான ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான ஹர்னூர் சிங் (21) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து விளையாடிய துணை கேப்டன் ஷேக் ரஷீத் அரை சதம் (50) விளாசினார். கேப்டன் யாஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். ராஜ் பாவா (35), கவுசல் (1) ரன்களில் வெளியேறினர்.
2011-யை நினைவுபடுத்திய தினேஷ்
இதனால், இந்திய அணி 46.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. எனினும் நிஷாந்த் (50), தினேஷ் பானா (13) ஜோடி இந்திய அணியை 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களை சேர்த்து வெற்றி பெறச் செய்தது. இதில், வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் பானா தொடர்ந்து 2 சிக்ஸர் அடித்து இலக்கை எட்ட உதவினார். மேலும் இந்த சிக்ஸர்கள் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்ததை நினைவுபடுத்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரர்களுக்கு பரிசு
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரூ.40 லட்சமும், அணி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.