games

img

விளையாட்டு...

மலேசியன் இன்விடேசனல் நீச்சல் சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு 5 தங்கம்

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேசனல் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா சார்பில் களமிறங்கிய வேதாந்த் (ஆடவர்) 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 1500 மீ என 5 பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். நீச்சல் உலகில் அனைத்து பிரிவுகளிலும் பதக்கம் வெல்வது சாதாரண விஷயமில்லை. ஆனால் வேதாந்த் தான் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் முதலிடத்துடன் தங்கம் வென்று சர்வதேச விளையாட்டு உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். வேதாந்த் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவனின் மகனாவார்.

ஐபிஎல் - 2023

பெங்களூரு அணி தோற்றதால் பெப்சி குடித்துக் கொண்டே அழுத ரசிகர்

இலவச டிக்கெட் கொடுத்து மைதானத்திற்கு அனுப்பி வைத்த பெப்சி நிர்வாகம்

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பலமாக களமிறங்கினாலும் இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் சீசனிலும் பெங்களூரு அணி ஒருமுறை கோப்பை வென்றதில்லை. நடப்பு சீசனிலாவது கோப்பை கனவு நனவாகும் என்ற எண்ணத்தில் கர்நாடக, கோலி ஆதரவு ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த கவனத்துடன் வெற்றியை எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் என்ன துரதிர்ஷ்டம் என்று தெரியவில்லை கடந்த காலங்களை போலவே ஒரு வெற்றி என்றால் இரண்டு தோல்வி என அடுத்தடுத்து கிடைக்கிறது.  இந்நிலையில், நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் (கடந்த ஏப்., 10) பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இளம் ரசிகர் ஒருவர் ஒரு மூலையில் சோகமாக அமர்ந்து பெப்சி குடித்துக் கொண்டே அழுதார். இதனை புகைப்படமாக எடுத்த இளம் ரசிகரின் சகோதரி ஜோத்சனா,”என் தம்பி ஆர்சிபி (பெங்களூரு) அணி தோற்றதால் சோகமாக பெப்சி குடிக்கிறான்” என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதனை கண்ட பெப்சி நிர்வாகம் சனியன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோத்சனா தம்பிக்கு இலவச டிக்கெட் வாங்கி கொடுத்து (20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு -  தில்லி அணிகள் மோதின) அவரை மைதானத்திற்கு அனுப்பியது. அன்று தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை பார்த்து அழுது கொண்டே இருந்த அந்த இளம் ரசிகர், நேரடியாக பெங்களூரு அணியின் ஆட்டத்தை கண்டது மட்டுமல்லாமல் பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடினார்.மேலும் டிக்கெட் வழங்கிய பெப்சிக்கு நன்றி என மைதானத்திலேயே போஸ்டர் பிடித்து காட்டினார். இதனை பெப்சி நிர்வாகம்,”எழுந்திரு குழந்தையே, சோகமாக இருக்க நேரமில்லை, வாழ்க்கை மிகவும் குறுகியது” என்று பதிவிட்டது. பெப்சி நிறுவனத்தின் இந்த செயல்பட்டிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.

இன்றைய ஆட்டம்

மும்பை - ஹைதராபாத்
இடம் : ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
நேரம் :  இரவு 7:30 மணி