விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டங்கள் (காலிறுதி)
போர்ச்சுக்கல் - மொரோக்கோ
வெற்றி வாய்ப்பு
58% 42%
கேப்டன் (ரொனால்டோ) - கேப்டன் (சாய்ஸ்) நேரம் : இரவு 8:30 மணி / இடம் : அல் துமாமா
இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என திடமாக கருத்து கூற முடியாது என்றாலும், பலம், அனுபவம் அடிப்படையில் போர்ச்சுக்கல் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. லீக், நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் போர்ச்சுக்கல் அணி பிரம்மாண்ட வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. அதே போல ஆப்பிரிக்காவின் இளம் கன்றான மொரோக்கோ லீக் சுற்றில் பல சீனியர் அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது மட்டுமல்லாமல், நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீட்டுக்கு அனுப்பியது. பயமரியா பல இளம் வீரர்கள் இருப்பதும், தந்திரமான தாக்குதல் ஆட்டமும் மொரோக்கோ அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த அணிக்கும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. கள நடுவர் : பேகுன்டோ டெல்லோ (அர்ஜெண்டினா)
பிரான்ஸ் இங்கிலாந்து
வெற்றி வாய்ப்பு
60% 40%
கேப்டன் (லோரிஸ்) - கேப்டன் (ஹாரி) நேரம் : நள்ளிரவு 12:30 மணி (ஞாயிறன்று) இடம் : அல் பாயித்
இரு அணிகளும் சரிசம பலத்தில் இருந்தாலும், பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை விட சற்று சூப்பர் பார்மில் உள்ளது. இதனால் திடமாக இந்த அணி தான் அரையிறுதிக்கு முன்னேறும் என உறுதியாக ஆருடம் கூற முடியாது. பிரான்ஸ் அணி பதுங்கி பாயும் வித்தியாசமான ஆட்டத்திறனை கொண்டது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடமும் ஆட்டத்திறன் மாறும்படியும், திடீரென தாக்குதல் நடத்தும் ஆட்ட நலன்களை கொண்டது. மேலும் நாக் அவுட் சுற்று வரை சொதப்பல் இல்லாமல் அசத்தலான வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே போல இங்கிலாந்து அணி சிரமம் இல்லாமல் காலிறுதிக்கு முன்னேறினாலும், பதற்ற மேலாண்மையால் முக்கியமான கட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் பார்ம் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதனை மாற்றினால் இங்கிலாந்து அணியும் அரையிறுதியில் காலடி வைக்கலாம்.
கள நடுவர் : வில்டன் (பிரேசில்)
கத்தாரில் உடைந்தது ரொனால்டோவின் அகந்தை
கத்தார் உலகக்கோப்பை சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் அரங்கேறினாலும், ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணிக்குள் அரங்கேறிய “ஈகோ” பிரச்சனை கால்பந்து உலகில் தலைப்பு செய்தியாக உள்ளது. முதல் 2 லீக் ஆட்டங்களில் நன்றாக விளையாடிய போர்ச்சுக்கல் அணி, இளம் கன்றான தென் கொரிய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் ரொனால்டோவின் 2 மிகப்பெரிய தவறால் படுதோல்வியை சந்தித்தது. இதனால் போர்ச்சுக்கல் பயிற்சியாளர் சான்டோஸ் அணியில் பல்வேறு மாற்றங்களை செய்தார். முக்கியமாக கேப்டன் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்து, பெபேவிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்து, முன்களத்தில் போதிய அனுபவம் இல்லாத இளம் வீரர் ரமோஸை ரொனால்டோ இடத்தில் நிற்கவைத்து பல தைரியமான முடிவுகளை எடுத்தார். சான்டோஸின் முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற ரொனால்டோவை அவர் கண்டுகொள்ளவில்லை. பெயரளவுக்கு 73-வது நிமிடத்தில் ரொனால்டோவை களமிறக்கினார்.
களத்திலும் ரொனால்டோ கோபம் கலந்த புன்னகையுடன் இருந்தார். ரொனால்டோ இடத்தில் விளையாடிய ரமோஸ் ஹாட்ரிக் கோலடித்து போர்ச்சுக்கல் அணியை கரையேற்ற, போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோ இல்லாமல் சாதிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு எல்லாம் ரொனால்டோ தான் காரணம். கால்பந்து உலகில் முக்கிய நட்சத்திரமான ரொனால்டோ போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் மட்டுமல்ல, அந்த அணியின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய முக்கிய நபர். மேலும் அணியின் கள ஆலோசகராகவும் உள்ளார். கிளப் போட்டிகளிலும் ஒவ்வொரு அணிகளும் (மான்செஸ்டர் யுனைடெட், ஜுவன்டஸ், ரியல் மாட்ரிட்) போர்ச்சுக்கல் அணியை போல ரொனால்டோவை கொண்டாட ஆரம்பித்தார்கள். இது ரொனால்டோவிற்கு சற்று தலைக்கனத்தை ஏற்படுத்த, அவர் தனக்காக ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட ஆரம்பித்தார். கோலடிக்க மட்டுமே ஆசைப்படுவார். தான் கோலடிக்க மற்ற வீரர்கள் பாஸ் செய்யவில்லை என்றால் ஆத்திரத்தோடு கத்துவார். இது ரொனால்டோவின் குணநலனாக வெளிப்பட்டது. இந்த குணம் தென்கொரியா அணிக்கெதிரான ஆட்டத்தில் வெளிப்பட்ட நிலையில், போர்ச்சுக்கல் அணியின் தேசிய உணர்வு கொண்ட பயிற்சியாளர் சான்டோஸ் பெஞ்சில் அமர வைத்து ரொனால்டோவின் சுயநலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கால்பந்தில் “ஈகோ” என்ற வார்த்தை உச்சரிப்பில் கூட இருக்கக்கூடாது
கால்பந்தில் “ஈகோ” என்ற வார்த்தை இருக்கக்கூடாது. அதுவும் அணியின் கேப்டன் - பயிற்சியாளர் இடையே ஈகோ இருந்தால் அணி சரியாக இருக்காது. பார்ம் பிரச்சனையில் சிக்கி உருக்குலைந்துவிடும். தற்போதைய நவீன கால்பந்து உலகில் ஒவ்வொரு அணியிலும் ஒன்றிரண்டு சீனியர் வீரர்கள் மட்டும் உள்ளனர். மற்ற அனைவரும் இளம் வீரர்கள். கேப்டன் - பயிற்சியாளர் இடையே ஈகோ பிரச்சனை அணிக்குள் மாறுபட்ட அமைதியை உருவாக்கும். இந்தமாதிரியான சிறிய சச்சரவுகளை இளம்வீரர்கள் உள்வாங்கும் மனதை கொண்டவர்கள் என்பதால் அணிக்குள் பார்ம் பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது. இதனை தொடக்கத்திலேயே சமாளிப்பது நல்லது. மேற்கொண்டு எண்ணெய் ஊற்றி சூடேற்றினால் கால்பந்து அணி கருகிவிடும்.
தங்க கையுறை (வாய்ப்புள்ளவர்கள்)
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் கோல்கீப்பர்களுக்கு தங்க கையுறை வழங்கப்படும். அதன்படி கத்தார் சீசனில் தங்க கையுறையை பெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியல்:
1.அலிசன் பெக்கர் (பிரேசில்)
2.எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா)
3.ஹ்யூகோ லோரிஸ் (பிரான்ஸ்)
4.டொமினிக் லிவாகோவிச் (குரோசியா)
5.யாசின் பவுனோ (மொரோக்கோ)
6.வோஜ்சிக் ஸ்செஸ்னி (போலந்து)
தங்கக் காலணிக்கு கோல்கள் கணக்கீடு போன்று தங்கக் கையுறைக்கு புள்ளிகள் கணக்கீடு கிடையாது. இதனால் தங்கக் கையுறை பெறுபவர்கள் பட்டியல் சற்று ரகசியமாக தயாரிக்கப்படுகிறது.