எவ்வித விளையாட்டாக இருந்தாலும் வெற்றி பெற்றால் தான் ரசிகர்களிடம் ஒரு அணிக்கு மதிப்பு, மரியாதை உண்டு. தோல்விகண்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. ரசிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். போராட்டம், கலவரம், சமூக வலைத்தள கேலி கிண்டல், மீம்ஸ் என பல்வேறு அவதூறான சம்பவங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறும். இதுதான் விளையாட்டு உலகின் வழக்கமான நடைமுறை. ஆனால் இந்த நடைமுறையை பெரு நாட்டு கால்பந்து ரசிகர்கள் மாற்றி அமைத்து விளையாட்டு உலகில் பலத்த பாராட்டை பெற்றுள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. தற்போது இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடைசி அணியாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் 6-வது முறையாக தகுதி பெற்றது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடான பெருவை பெனால்டி சூட் முறையில் 5-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லையே நாட்டிற்குள் எப்படி நுழைவது என்று பெரு அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் கவலையில் ஆழ்ந்த நிலையில், “உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றாலும், நாங்கள் நன்றாக விளையாடினோம், எங்கள் அணி அபாரமாக விளை யாடியது” என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. கடைசி தகுதி சுற்று ஆட்டத்தை பெரு நாட்டின் தலைநகர் பகுதிகளில் குவிந்த அந்நாட்டு ரசிகர்களின் குரல் இது. இந்த குரல்களை கண்டு பெரு வீரர்கள் மட்டுமின்றி, கால்பந்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்த காலத்தில் இப்படி ஒரு ரசிகர்களா? என பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
அபார ஆட்டம்
உண்மையிலேயே பெரு அணி அபாரமாக தான் விளையாடியது. ஒவ்வொரு நிமிடங்களிலும் மிக கவனமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பல்வேறு கோல் முயற்சிகளை தடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. ஆனால் பெரு நாட்டின் கோல் கீப்பரின் கடைசி சொதப்பலால் தான் பெனால்டி ஷூட் பறிபோய் கோலானது.
2-வது சம்பவம்
ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோல்விகண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாத சோகத்தில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மைதானத்திலேயே கதறி அழுதனர். இதனை கண்ட தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு முழுஆதரவு அளித்து வீரர்கள் அணி நிர்வாகத்தினர் தென் ஆப்பிரிக்கா வந்த பொழுது பிரம்மாண்ட வரவேற்பும் அளித்து அசத்தினர்.