games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

மகுடம்  யாருக்கு ?

அர்ஜெண்டினா - பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை

அர்ஜெண்டினா - பிரான்ஸ்

நேரம்: இரவு 8.30 மணி
இடம்: லுஸைல்கள நடுவர்: சைமோன் மார்ஸிநியாக் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நடுவரான சைமோன் மார்ஸிநியாக் மிகவும் கண்டிப்பான குணம் கொண்டவர். சேனல்: ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா

22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா அணியும் மோதுகின்றன.

வெற்றி வாய்ப்பு

50% - 50%
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்த அணிதான் கோப்பையை கைப்பற்றும் என திடமாக  கணிக்க முடியாது. காரணம் இரு அணிகளும் மிரட்டலாக சரிசமமான பலத்தில் உள்ளன. 

நேருக்கு நேர் 
(உலகக்கோப்பை)
மொத்தம் - 12 ஆட்டங்கள்
வெற்றி 
அர்ஜெண்டினா - பிரான்ஸ்
6 - 3 
டிரா -3

பரிசுத்தொகை

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு - ரூ.347 கோடி
2-ஆம் இடம் - ரூ.248 கோடி.
இதுபோக, பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பரிசுத் தொகை உள்ளது.

கோப்பையுடன்  விடைபெறுவாரா மெஸ்ஸி?

2005-ஆம் ஆண்டு முதல் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸிக்கு இது 5-வது உலகக்கோப்பை (2006, 2010, 2014, 2018, 2022) ஆகும். 5 உலகக்கோப்பையில் மொத்தம் 25 ஆட்டங்களில் விளையாடி 11 கோலடித்து அதிக கோல் அடித்த வரலாறுடன் (அர்ஜெண்டினா சார்பில்) டாப் ஆர்டரில் உள்ளார். 35 வயதாகிவிட்ட நிலையில், கத்தார் சீசன்தான் மெஸ்ஸிக்கு கடைசி உலகக் கோப்பையாகும். இதை அவரே அறிவித்துவிட்டார். இந்நிலையில் கோப்பையுடன் மெஸ்ஸி விடைபெறவும், கோப்பையோடு மெஸ்ஸி விடைபெறவும் அர்ஜெண்டினா வீரர்கள் தீவிர பயிற்சியுடன் களமிறங்கியுள்ளனர். 

மெஸ்ஸி களமிறங்குவாரா?

குரோஷியா அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தின் பொழுதே கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸி இடது காலில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு 100 சதவீத உடற்தகுதி இல்லாமல் களமிறங்கி விளையாடி ஒரு கோலும் அடித்து அணியை வழிநடத்தி இறுதிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் இடது காலில் தசைப்பிடிப்பு மேலும் வீர்யமான நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை. இதனால் இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறங்குவது சந்தேகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை மெஸ்ஸி களமிறங்கவில்லை என்றால் அர்ஜெண்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மற்றொரு நட்சத்திர வீரர் டி மரியாவும் காயத்தால் ஓய்வில் உள்ள நிலையில், காயம் அர்ஜெண்டினாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தசைப்பிடிப்பால் விளையாட முடியுமா?

தசைபிடிப்பு என்பது தசை சுருங்கும் நிகழ்வு ஆகும். தசைகளின் நீர்ச்சத்து குறைபாட்டால் இது ஏற்படும். தசைப்பிடிப்பு ஏற்பட்டால் மற்ற விளையாட்டுகளில் ஓரளவு களமிறங்கி விடலாம். ஆனால் ஓட்டங்களைச் சார்ந்த  முக்கிய விளையாட்டான கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் விளையாடுவது சிரமம். முக்கியமாக கால்பந்தில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தசைப்பிடிப்பால் விளையாட முடியாது.

மெஸ்ஸியின் கைக்கு அருகில் 2 விருது... 

உலகக்கோப்பையில் தங்க காலணி, தங்கப்பந்து, தங்க கையுறை, சிறந்த இளம் வீரர், வளரும் வீரர் என பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. இதில்  விருதை பெற அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி, பிரான்ஸ் வீரர் மாப்பே இருவருக்கும் கடும் போட்டி உள்ளது. தங்க காலணி, தங்கப்பந்து, தங்க கையுறை விருதுகள் முக்கியமானது. தற்போதைய நிலையில் தங்க காலணி, தங்கப்பந்து என இரண்டு விருதுகளையும் வெல்ல மெஸ்ஸிக்கு வாய்ப்புள்ளது. காயத்தால் அவதிப்படும் மெஸ்ஸி இறுதிபோட்டியில் பங்கேற்கவில்லை என்றால் தங்க காலணி, தங்கப்பந்து விருதுகளை பிரான்ஸ் வீரர் மாப்பே பறித்துச் செல்ல வாய்ப்புள்ளது. தங்க கையுறை கோல் கீப்பருக்கு வழங்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு: கத்தார் சீசனில் கண்டங்களின் மோதல் உருவாகியுள்ளது. தென் அமெரிக்க கண்டமும் (அர்ஜெண்டினா) - ஐரோப்பிய (பிரான்ஸ்) கண்டமும் மோதுகிறது. இதனால் கத்தார், அர்ஜெண்டினா, பிரான்ஸ், பிரேசில் (அர்ஜெண்டினாவுக்கு எதிர்) ஆகிய நாடுகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளா, கோவா, தமிழ்நாடு (கன்னியாகுமரி,சென்னை, கோவை), மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லேசான கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.