பின்லாந்தில் நடந்த சர்வதேச ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். நேற்று பெய்த மழைக்காரணமாக மைதானத்தில் ஈரமான சூழ்நிலைகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 86.69 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். பின்னர், மூன்றாவது முயற்சியில் ஈட்டி எறிந்தபோது மைதானத்தில் இருந்த ஈரத்தன்மையால் தடுமாறி விழுந்த அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
தொடர்ந்து, டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நீரஜ் பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
கடந்த வாரம் பின்லாந்து நாட்டின் பழைய நகரமான துர்க்குவில் நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அந்த சாதனையை அவரே முறியடித்ததுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஜூன் 30 ஆம் தேதி நடைபெற உள்ள டயமண்ட் லீக்கின் ஸ்டாக்ஹோம் லெக்கில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார்.