நோங்போக் காச்சிங். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற தருணத்தில் இந்த கிராமம் பரபரப்பாக பேசப்பட்டது. மணிப்பூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுதான் ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சாய்கோம் மீராபாய் சானுவின் கிராமம். சாய்கோம் மீராபாய் சானு பதக்கம் வென்றபிறகு ஒன்றிய அரசும், மணிப்பூர் அரசும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேறவில்லை. தற்போது மணிப்பூரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை. சாய்கோம் மீராபாய் சானுவின் குடும்பம் நோங்கோப் காச்சிங்கில் வசிக்கிறது. மணிப்பூரில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், குண்டும் குழியுமான ஒற்றை வழிச் சாலை வழியாகத்தான் வேட்பாளர்கள் சென்று வருகின்றனர். இவர்களது வாகனங்கள் செல்லும்போது கிளம்பும் புழுதிப்படலம் ஒவ்வொரு வீட்டிலும் படிகிறது.
வெள்ளிப்பதக்கம் வென்ற சானுவைப் பாராட்டும் போது மிகப்பெரிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக அனைவருக்கும் குடிநீர் விநியோகம் உறுதிப்படுத்தப்படும், மோசமான சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். தற்போது வரை இதில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. “எங்கள் கிராமத்தில், எங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை, குடிநீர் குழாய் கூட இல்லை. எங்கள் குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை டேங்கர் ஆபரேட்டர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ1,000 கொடுத்து வாங்குகிறோம்,” என்கிறார் சானுவின் தாய் சாய்கோம் டோம்பி. வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு-வை பாராட்ட வந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ரூ.1.2 கோடி மதிப்பில் தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனர். இதற்கான பணிகளும் 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது அது ஒரு வாக்குறுதியாக மட்டுமே உள்ளது. சுமார் 15 சதவீத கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு மாரச் 8-ஆம் தேதி நிறைவடைய வேண்டியதாகும். இன்றுவரை கிராமம் முழுமைக்கும் ஒரு குழாய் கூட இல்லை என்கிறார் உள்ளூர் இளைஞர் சங்கமான பிரைட் ஸ்டார் யூனியன் (BSU) தலைவர் மயங்கலம்பம் கென்னடி.
சானுவின் குடும்பத்தைப் போலவே, மற்றவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சராசரியாக ரூ.500 முதல் ரூ.700 வரை மாதம் தோறும் குடிநீருக்காக செலவழிக்கின்றனர். மற்ற தேவைகளுக்கு குளங்களையும் அருகிலுள்ள நீரோடைகளையும் பயன்படுத்துகின்றனர். குடிநீர் பிரச்சனை ஒருபுறம் மற்றொருபுறத்தில் தனக்கு ஒரு தணியாத தாகம் இருப்பதாகக் கூறுகிறார் சானுவின் தாய் சாய்கோம் டோம்பி. நோங்போக் காச்சிங்கிற்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். அடுத்து பொறுப்பேற்க உள்ள அரசாங்கம் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். எங்கள் ஊர் சாலை உண்மையிலேயே மோசமான நிலையில் உள்ளது. பருவமழை காலத்தில் இதைவிட மோசமாகிவிடும். நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம், அதெல்லாம் வீணாவிட்டது என்றார்.
டோம்பியின் மற்றொரு மிகப்பெரிய கவலை எங்கள் ஊரான நோங்போக் காச்சிங்கில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை. மருத்துவம் உள்ளிட்ட அவசர காலங்களில், நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் ஊர் சாலை எங்களுக்கு சவால் விடுப்பதாய் அமைந்துள்ளது என்கிறார். ஏறக்குறைய 300 வாக்காளர்கள் சுமார் 85 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். நோங்போக் காச்சிங் கிராமம் லாம்லாய் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் இருந்து பதக்கத்துடன் சானு வீட்டிற்கு வருவதற்கு சாலையில் இருந்த பள்ளங்கள் மூடப்பட்டன என்கிறார் பிரைட் ஸ்டார் யூனியன் உறுப்பினர் எம்.ஜெயந்தா. இந்த மகிழ்ச்சி சில காலமே நீடித்தது. அதற்குப் பிறகு யாரும் திரும்பிப் பார்க்கவோ கவலைப்படவோ இல்லை என தனது வேதனையை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்ல தங்களது கிராமத்தில் மீராபாயின் பெயரில் உடற்பயிற்சி கூடம் கட்டுவதாக வாக்குறுதியளித்துள்ளனர். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை’ என்றார் எம்.ஜெயந்தா.
இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில், வழக்கமான ஆசிரியர்கள் வராததால், கிராம வளர்ச்சிக் குழுவால் (விடிசி) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் தான் வகுப்புகளை நடத்துகின்றனர். பல ஆண்டுகளாக எங்கள் கிராமம் புறக்கணிப்படுவது ஏமாற்றமளிக்கிறது. கொரோனா தொற்றுநோய் மாநிலம் முழுவதும் பள்ளிகளின் செயல்பாட்டை பாதித்தது, ஆனால் எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி அதற்கு முன்பே புறக்கணிக்கப்பட்டது. 10-ஆம் வகுப்பு வரை இருந்த பள்ளி தரம் குறைக்கப்பட்டு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கப்படுகிறது. ஆயினும் இன்றைய சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் உள்ளன,’’ என்றார். போதுமான ஆசிரியர்களும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால், கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் தற்போது தொலைதூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் பளுதூக்குதல் சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற சாய்கோம் மீராபாய் 55 கிலோ எடைப் பிரிவில் 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மீண்டும் தகுதி பெற்றுள்ளார்.
- ச. நல்லேந்திரன்