விளையாட்டு உலகில் அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் 39 வயதாகும் மிதாலி ராஜ். முன்னோடிகள், தடங்கள் இல்லாத ஓர் இருள் சூழ்ந்த நிலையில் தனக்கான ஒரு பாதையை திடமான மனதோடும் தீர்க்கமான எண்ணத்தோடும் முடிவுசெய்து பயணித்தவர் மிதாலிராஜ். ஏனெனில் பி.டி. உஷா, கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் பதக்கங்களை வென்ற பிறகு தான் விளையாட்டு உலகில் பெண்களின் பங்கும் முக்கியத்துவமும் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அதன் பிறகுதான் விளையாட்டில் சாதிப்பதை தங்களது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு பெண்கள் பலரும் ஆர்வத்துடன் முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் மிதாலி துரைராஜ். மிதாலி ராஜ் ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூர் மாவட்டத்தில் 1982ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனாலும் வளர்ந்தது கல்வி படிப்பை முடித்தது அனைத்தும் ஹைதராபாத். மிதாலி ராஜின் தந்தை துரைராஜ் விமானப்படை அதிகாரியாக பணியாற்றியவர். இவரதுபெற்றோர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். பத்து வயதில் கிரிக்கெட்டை தேர்வு செய்த மிதாலிராஜின் ஆரம்ப கால பயணம் அவ்வளவு ஒன்றும் சுலபமாக அமையவில்லை. ஒளி மயமாகவும் இல்லை. ஆனாலும் முன்வைத்த காலை பின் வைப்பதில்லை என்று அவர் முடிவு செய்தார்.
தடைகளைத் தாண்டி...
தினமும் தனது சகோதரர் மிதுனுடன் கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்தார். மிதாலி ராஜின் தந்தை துரைராஜ், தாய் லீலா இருவரும் மகளின் விளையாட்டு ஆர்வத்தை ஒரு போதும் தடை செய்யவில்லை. தொடர்ந்து அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வந்தனர். இவரது தனித்துவமான திறமையால் இந்திய அணிக்கு 16 வயதில் தேர்வு செய்யப்பட்டார். தனது அறிமுக ஆட்டத்திலேயே அயர்லாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி உலக சாதனை படைத்து முத்திரை பதித்தார். ஆனாலும், அந்த சமயம் பெண்கள் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதால் அதிகம் பேசப்படவில்லை. போதிய சம்பளம் தரப்படவில்லை. இருந்தாலும் அனைத்து இடர்களையும் தாங்கிக்கொண்டு விளையாட்டில் முழு திறமையையும் வெளிப்படுத்தினார். மகளிர் கிரிக்கெட்டுக்கு அதிக வரவேற்பு இல்லாத அந்த காலகட்டத்தில் தனி மனிதராக போராடி வெற்றிகளைத் தேடிக் கொடுத்து இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் முகமாக போற்றப்பட்ட மிதாலி ராஜ் மிக விரைவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பேசப்பட்டார். பெண்கள் கிரிக்கெட் உலகில் இந்திய அணிக்கு சாதாரண வீரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்ற நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ்,சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7805 ரன்களும் டெஸ்ட் தொடரில் 2364 ரன்களும் டி20 போட்டியில் 700 ரன்களும் குவித்து அனைத்து வகையான போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்து சாதனை படைத்திருக்கும் ஒரே வீராங்கனை.
அதுமட்டுமல்ல, ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 7 அரை சதங்கள், டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம், 235 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ஒரே வீராங்கனை, ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை அடித்து நொறுக்கியவர், அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற வீராங்கனை என்று இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். 2005ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணியில் இவரது பங்கு அளவிட முடியாது. ஆனாலும் அன்றைக்கு கத்துக்குட்டியாக இருந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கியது. அதே ஆஸ்திரேலியாவை 2017ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றவர் மிதாலி ராஜ். ஆரம்பத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த மிதாலி ராஜ், ரயில்வே அணிக்காகவும் விளையாடினார். பின்னர் ஏர் இந்திய அணியில் பூர்ணிமா ராவ், அஞ்சும் சோப்ரா, அஞ்சு ஜெயின் ஆகியோருடன் இணைந்து கலக்கினார். கால் நூற்றாண்டு காலம் அளப்பரிய சாதனை படைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ‘சாதனை சிகரம்’ மிதாலிராஜ்க்கு சேவை மற்றும் அதன் திறமைக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருதுகளும் வழங்கப்பட்டன. அதேபோல் விளையாட்டுத் துறையில் உயரிய விருதான கேல் ரத்னா, சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதும் கிடைத்தன. பிபிசியின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டார். மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்து, காலத்தால் நிரப்ப முடியாத தனக்கே உரிய இடத்தை விட்டு இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடைபெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒவ்வொரு முறையும் களம் இறங்கும் போது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தை மற்றவர்களும் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
- சி. ஸ்ரீராமுலு