கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 247 விளையாட்டு அகாடமிகளுக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தவும், மாநிலங்களின் வேண்டுகோளின்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என பல பிரிவுகளில் 289 விளையாட்டு கட்டமைப்பு திட்டங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 247 விளையாட்டு அகாடமிகளுக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஊரக, உள்நாட்டு மற்றும் பழங்குடியினர் விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்பம், களரிபயத்து, கத்கா மற்றும் சிலம்பம் போன்றவை உள்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளாக அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த பிரிவின் கீழ் கட்டமைப்புகளை உருவாக்கவும், சாதனங்கள் வாங்கவும், பயிற்சியாளர்களை நியமிக்கவும், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உதவித் தொகை வழங்கவும் மானியங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த விளையாட்டுகளில் பதக்கம் வென்ற 283 பேருக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பாரம்பரிய விளையாட்டுக்கள் ஹரியானா பஞ்ச்குலாவில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.