அஷ்டாவதானிகள் அல்ல
ஆயிரம் தலைகள் கொண்ட
அபூர்வ ராவணர்கள்.
நூறு நூறு போராட்டங்கள்
ஆயிரமாயிரம் களங்கள்
லட்சோப லட்சம் கிலோமீட்டர்
நெடும் பயணங்கள்
கோடி கோடிக் கனவுகள் கண்ட
உன்னதமான தலைவர்கள்
கட்சி முடிவைப் பேசிவிட்டு
சொந்தத் தவறுபோல்
தண்டனையேற்ற யோகிகள்
சொந்தத் திறனை மிளிரவிட்டு
கட்சியின் கொடையென கைகாட்டும்
பரோபகாரிகள் நம் தலைவர்கள்
தொழிலாளி வர்க்கத்தின்
கைவிலங்கு ஒடிக்க
தன் கைகளில் விலங்கு தாங்கிய
தகைமை சால் தோழர்கள்
கட்சியை ஒருங்கிணைக்க
தொழிலாளிகளை ஒற்றுமைப்படுத்த
தோழர் குடும்பங்களைக் காக்க
ஊர் நாட்டு மக்களைக் காக்க
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக
ஓயாது குரல் கொடுத்து
ஓய்வொழிச்சலின்றி உடல் சோர்ந்து
மெழுகுவர்த்திகளாய் எரிந்தார்கள்
எத்தனை எளிதாய் வழிவிட்டு
எத்தனை மகிழ்ச்சியாய்
இளையோரைக் கைதூக்கிவிட்டு
புன்னைகையோடு ஒதுங்கி நிற்க
வேறு யாரால் ஆகும் - தகும்?
எழுதிய பக்கம் எத்தனை எத்தனை
பேசிய வார்த்தைகள் எத்தனை
படித்த புத்தகங்கள் தான் எத்தனை
தூங்காது கண்கொட்ட விழித்த
இரவுகள் தான் எத்தனை எத்தனை?
எண்ணிப் பார்த்தால் கலக்கம்
எழுதிப் பார்த்தால் கண்ணீர்...
இத்தனை இடிபாடுகளில் இருந்து
விடுதலை தான் அளித்தோமா?
விருப்ப வேலையில் இருந்து
தள்ளி வைத்து தண்டித்தோமா?
இது அறிவியலா; அறவியலா?
மனம் அரற்றித் தவிக்கிறேன்...
ஏனென்றால் நானும் கூடத்தான்
எழுபது வயதுக்கு மேல்
மனித மூளையின் அந்த
மெயின்டெர்ன் நரம்புகள்
ஒத்துழைக்காது எனப் புலம்பிய
ஏங்கெல்சை நம்பினேன்... தான்!
ஆனால், இந்த ஐந்தாறு நாட்களில்
அறிவு சொல்வதை மனம் மறுக்கிறது
மூளை சொல்வதை
நெஞ்சம் வெறுக்கிறது
வேதியியலையும் உயிரியலையும்
வரலாறு வந்து பார் என்கிறது!
எங்கள் தலைவர்களே
எப்போதும் போலவே இப்போதும்
வாழ்ந்து காட்டிவிட்டு நிற்கிறீகள்
வாத்தியார்களாய் ஒளிர்கிறீர்கள்!
இந்தப் புலம்பலை ஏற்றுக்கொண்டு
இந்தத் தவிப்பைத் தாங்கிக்கொண்டு
இந்தக் காணிக்கை கண்ணீரை
இந்தக் கண்ணீரின் வெப்பச் சூட்டை
இந்த ஆற்றாமையின் குமுறலை
வழக்கம் போல் புன்னகைத்து கடப்பீர்!
வேறு வார்த்தைகளில்லை
லால் சலாம் தோழர்களே!
- சூர்யா, சென்னை