சமஸ்கிருதம் முக்கியமல்ல குழந்தைகளே முக்கியம் ஒன்றிய அரசே என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுள்ளதாவது
ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகங்களை இழைக்கிறது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்(ICPS), இனி "மிஷன் வாத்சல்யா" என அழைக்கப்படுமாம். சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
47 கோடி குழந்தைகள் நிறைந்த தேசம் இது. திட்டத்தின் பெயர் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் ஒன்றிய அரசு அதற்கான நிதிஒதுக்கீட்டிலும் அமலாக்கத்திலும் செலுத்திய கவனம் என்ன என்பதுதான் கேள்வி.
இதோ பட்ஜெட் 2022க்கு பிறகு வந்த செய்திகள்
* சுருங்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பட்ஜெட் ஒதுக்கீடு - டெக்கான் கிரானிகில்
* மோடி பதவி ஏற்ற காலத்தில் இருந்து பாதியாகிப் போன குழந்தைகளுக்கான பட்ஜெட் பங்கீடு - தி வயர்
* பத்தாண்டுகளில் இதுவே குழந்தைகளுக்குக் குறைவான ஒதுக்கீடு தந்த பட்ஜெட் (பிசினஸ் டுடே)
சமஸ்கிருதம் முக்கியமன்று ஒன்றிய அரசே...
குழந்தைகள் முக்கியம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு. கொரோனா சூழலுக்குக் குழந்தைச் சமூகமே மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் இந்த நிதிக்குறைப்புப் பெரும் விளைவுகளை உருவாக்கக் கூடியது.
இந்தியக் குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் ஒரு சேர வஞ்சகங்கள் செய்வதைக் கைவிடுங்கள்.