அவர் பெயர் முஸ்தபா, மதுரையில் வசித்தவர். கேரளாவில் கூலி வேலை பார்த்து, பணம் அனுப்பி தன் தாயைக் காப்பாற்றி வந்தவர்.
இன்று அவர் உயிரோடு இல்லை.. கொரோனா அவரைக் கொல்லவில்லை. கொரோனா குறித்த மக்களின் பீதியும், நான் பிழைத்தால் போதுமென்ற சுயநலவெறியும்தான் அவரைக் கொன்றுவிட்டது.
தனது வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் நடந்தே சென்று சரக்கு இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முஸ்தபாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு தெரியுமா?
வாட்ஸ் ஆப்பில், சமூக ஊடகங்களில் எது வந்தாலும், அது குறித்து ஒரு நிமிடமேனும் சிந்திக்காமல், அதை அப்படியே பார்வேர்டு செய்யும் மேதைகள், கனவான்கள், மதவெறியர்களின் வெறுப்பே காரணமாகும்..
நடந்ததைச் சொல்கிறேன்.
நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
தனது அக்கா வீட்டிலிருந்தவர், இறுமிக் கொண்டிருந்திருக்கிறார். தெருவினர் ஒன்றாகச் சேர்ந்து அவரது அம்மாவையும் திட்டி, மிரட்டி ஒரு மினி டெம்போவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
கேமரா உள்ள ஆன்டிராய்டு போனில் வாட்ஸ் ஆப்பையும் வைத்துக்கொண்டு ஆறறிவையும் அனுதினமும் பயன்படுத்தி பயன்படுத்தி பதிவுகள் உருவாக்கும் சமூகக் காவலர்கள் சும்மா இருப்பார்களா?
கொரோனா நோயாளிகள் என அந்தத் தாயையும், மகனையும் வேனில் ஏற்றும் காட்சியைக் காணொலி எடுத்து குழுவில் பதிவிடுகிறார். பரபரப்பும், வெறுப்பும் ஏற்படுத்தும் வதந்திகள் ஊரெங்கும் பரவ ஒரு நிமிடம் போதாதா?
இராஜாஜி மருத்துவமனையில், பரிசோதனை முடித்து கொரோனா இல்லையெனச் சொல்லிவிடுகிறார்கள். உடல் நலமற்ற ஒருவர் தன் வீட்டுக்கு வராமல் வேறெங்கு செல்லமுடியும்? தன் வீட்டுக்கு வருகிறார்கள். ஊரெங்கும் பரவிய காணொலி சொந்தத் தெருவில் பரவாமல் இருக்குமா? தெருவே வீட்டின் முன்கூடி தகராறு செய்கிறது. இரவு 2 மணி வரை தகராறு. முஸ்தபாவின் மனமும், அவரது அம்மா மனமும் என்ன பாடு பட்டிருக்கும்?
காலையில் குப்பை லாரியில் இருவரையும் ஏற்றி அனுப்பி, தன் பயம் போக்கிக் கொள்கின்றனர் தெருமக்கள். கொரோனா இவர்களுக்கு இல்லவே இல்லையென மீண்டும் தெளிவாய் சொல்லிவிடுகின்றனர் மருத்துவர்கள்.
தன் வீட்டுக்குப் போகமுடியாத முஸ்தபா என்ன செய்வார், சொல்லுங்கள்?
நடந்தே பத்து கிலோ மீட்டர் சென்று சரக்கு இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்.
அந்தத் தாய் இன்று அனாதையாய் நிற்கிறார்.
வாட்ஸ் ஆப் காணொலிகளால் அவருக்கு வாழ்வை அளித்துவிடமுடியுமா?
யார் இதற்குப் பொறுப்பேற்பது?
நாலைந்து பக்கங்களில் ஒரு கட்டுரையோ, நல்ல செய்தியோ வந்திருப்பின் அதைப் படிக்க வாட்ஸ் ஆப் மேதைகளில் பலர் விரும்புவதேயில்லை. போரடிக்குமாம். பொழுது போகத்தான் வாட்ஸ் ஆப் பார்க்கிறார்களாம். ஆகவே, சீரியசாய் ஏதும் செய்து மூடை கெடுத்துக் கொள்ளக்கூடாதாம். ஜாலியாய் இருக்கவேண்டுமாம்.
ஆனால், வெறுப்பை, பகைமையை பரப்பும் செய்திகளை மட்டும் பரப்பிக்கொண்டே இருக்கலாமாம். இதற்குப் பெயர்தான் பொழுதுபோக்கா?
ஜாலியான மூடு என்கிறோமே, அதன் பொருள் என்ன?
பிறர் குறித்து சிந்தித்தால் எனது ஜாலி மூடு பாதிக்கப்படுமெனில், என்னைப் பற்றி சிந்திக்க இந்த ஊரில், உலகத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டாரே?
காணொலிகள், மீம்ஸ்கள் மட்டுமே அவர்களின் ஒரே தீனியாய் இருக்கிறது. எவ்வளவு தின்றாலும் அவர்களின் வெறுப்பெனும் கோரப்பசி என்னவோ அடங்குவதே இல்லை. நேரம், காலமில்லாமல் பகைமையை பெருந்தீனி போல் தின்று கொண்டேயிருக்கிறார்கள்.
அந்த அம்மாவையும், முஸ்தபாவையும் கொரோனா நோயாளிகள் எனக் காணொலி எடுத்துப் பதிவிட்டவர் எந்த மனநிலையில் அதைச் செய்திருப்பார்? அவர்களைக் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் அவருக்கு நிச்சயம் இருந்திருக்காது. ஆனால், உயிரிழப்பில் போய் முடிந்துவிட்டதே?
செயலுக்கும், விளைவுக்குமான தொடர்பை ஜாலியான மூடு கொண்டு தீர்மானித்துவிடமுடியுமா? அல்லது
சமூகம், மனிதம் குறித்த பொறுப்புணர்வு அவசியமா?
இஸ்லாமியர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றொரு செய்தியும் காட்டுத்தீயாய் பரப்பப்படுகிறது. ஒரு இஸ்லாமியர் பழத்தை அடுக்கி வைக்கும் காணோலி, தட்டை வாயால் துடைக்கும் காணொலி, அரபி எழுத்து அடியில் இருக்க ஒருவர் தன் குடும்பத்தார் ஒருவருக்கு முத்தமிடும் காணொலி என அனைத்தும் பழைய காணொலிகள் மற்றும் டில்லி மாநாட்டுக் காணொலி என யப்பப்பா எத்தனைக் காணொலிகள்…
இந்தக் காணொலிகளெல்லாம் எதைச் சொல்கின்றன?
அன்பையா அல்லது வெறுப்பையா?
உண்மைகளையா அல்லது வதந்திகளையா?
டில்லியில் இருந்து திரும்பிய இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில்தான் இப்போதும் இருக்கின்றனர். அனைத்து வீடுகளிலும் நிச்சயம் குழந்தைகளும், பெண்களும், முதியோர்களும் இருக்கக்கூடும். நமது சமூக அமைப்பில், அநேகமாக இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்கின்றனர். அங்கு கர்ப்பிணிகளும், நோயுற்ற இஸ்லாமியரும் அதிகம் இருக்கக்கூடும்.
திட்டமிட்டு கொரோனா கிருமியை இவர்கள்தான் சுமந்து வருகிறார்களெனில், அதிகம்
இறப்பது இஸ்லாமியராகத்தானே இருக்கமுடியும்? அவர்தம் குழந்தைகள், மனைவி, பெற்றோர் மட்டும் எப்படித் தப்ப இயலும்?
இஸ்லாமியரிடமிருந்து இஸ்லாமியருக்குப் பரவாது என அறிவியல் சொல்கிறதா என்ன?
மசூதிகள் மொத்தவிற்பனை மையமாம். இஸ்லாமியர் சில்லறை விற்பனையாளர்களாம். ஒரு மீம்ஸ் சொல்கிறது. அப்படியெனில், கொத்து, கொத்தாய் இஸ்லாமியர்தானே இறந்துபோவர்?
கிருமி இருப்பதே தெரியாமல் இப்படி குடும்பத்துடன் இருந்துவிட்டனரே என்று மனித இரக்கம் கொள்வதற்கு மாறாக, வெறுப்பை விதைக்கிறோமே, வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு இந்துவிடம் இருந்து இன்னொரு இந்துவிற்கு இந்த வியாதி பரவவே இல்லையெனச் சொல்லிவிடமுடியுமா?
மதவெறிச் செய்திகளைப் பரப்பிடுவோர் நம் இந்து மதத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். நீ இந்துவெனில் இதை பார்வேர்டு செய்திடு எனச் சொல்லும் ஒரு பதிவை பகிர்ந்திட, இந்துவாக இருக்கும் ஒரே தகுதி நமக்குப் போதுமா? சமூகப் பொறுப்பு வேண்டாமா? தேச பக்தி வேண்டாமா?
ஒரு இஸ்லாமியர் வாக்குவாதம் செய்தால் மட்டும் இஸ்லாமியர் ஒத்துழைப்பதில்லையென மாறுகிறதே, ஏன்? சமூக விலகலைப் பின்பற்றாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களெல்லாம் எந்த மதமென்று பார்த்துள்ளோமா?
முதலமைச்சர் எடப்பாடி வந்து எனக்கு கொரோனாவைக் கண்ணில் காட்டவேண்டுமென்று பெண் காவலர் சிலரிடம் அட்டூழியம், வம்பு செய்தாரே ஒருவர், அவரின் மதம் தேடினோமா? யாரேனும் சொன்னார்களா?
அவையெல்லாம் செய்திகள். ஆனால், இவை மட்டும் எப்படி மதமாக மாறியது?
ஒரு கூட்டத்தினரை மட்டும் வெறுத்து, வெறுத்து ஒதுக்கிக் கொண்டேயிருப்பது நியாயமா? நமது மனித உணர்வையே இந்த வெறுப்புணர்வு அழித்துவிடுமே? மதப் பகைமை அதிகரித்தால் பொருளாதாரம் வளருமா என்ன? மதவெறிப் பகைமை வளரும் நாட்டில் அமைதி நிலைக்குமா?
சரி, அப்படியெனில் இந்துக்களுக்கு கொரோனா பரவாது என்று சொன்னால் நாம் நம்பிவிடுவோமா? அது எவ்வாறு உண்மை ஆகாதோ, அதைப்போன்றே கொரோனாவை இஸ்லாமியர்களால் இந்துக்களுக்கு மட்டுமே பரப்ப இயலும் என்பதும் ஒரு போதும் உண்மை ஆகாது.
இத்தாலி, சீனா, அமெரிக்காவிலிருந்து திரும்பிய இந்துக்கள் மற்றும் இதர மதத்தினரின் குடும்பமும் இன்று அதே நெருக்கடியைத்தான் சந்திக்கிறது. இப்படித் திரும்பிய எனது சில நண்பர்கள் இந்து உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். தாய், தந்தை, குழந்தை, மனைவியோடு அனைவரும் அரசின் பொறுப்பான கண்காணிப்பில், தனிமையில்தான் உள்ளனர். அரசு சொல்வதை முறையாய் கடைப்பிடிக்கின்றனர்.
ஆனால், தெருவில் என்ன நிலை தெரியுமா? சொந்த சித்தப்பாவும், உறவினர்களும் கூட அழைத்தால் வருவதில்லை. அவர்களே வதந்திகளை பரப்புகின்றனர். இப்போது ஏன் அவனை/ அவளை இங்கு வரச்சொன்னீர்கள் என குடும்பத்தாருடன் சண்டை போடுவதாகச் சொல்கின்றனர்.
இருமுறுகிறேன் எனப் பொய் பரப்பி போலிசை வரவழைக்கின்றனர் என்கிறார்கள் நண்பர்கள். வீட்டிற்குப் பின்புறம் அதாவது, அடுத்த தெருவில் உள்ளோரும் இப்போது பயந்து ஓடிவிட்டனராம்.
காய்கறி கிடைப்பதற்கே அல்லாடுகின்றனர். சும்மாவேனும் தும்மல், இருமல் வந்துவிடக்கூடாதென அவர்களின் மனம் படும் துயரம் இருக்கிறதே, அந்தத் துயரம் எந்த மதத்தைச் சார்ந்தது? யாரேனும் சொல்ல இயலுமா?
இந்துக்கள் அவர்கள். எனவே, அவர்களுக்கு சாதியும் உண்டு. அந்தச் சாதியைச் சொல்லி இப்போது பேசினால் அது முறையாகுமா?
மார்ச்.24 ஆம் தேதி வரை இந்த நாட்டில் எல்லாம் அதனதன் போக்கில்தானே நடந்துகொண்டிருந்தது. ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த அத்தனைக்கும் இப்போது மதச்சாயம் பூசுவது யாருக்கு ஆதாயம் தரும்? பொறுப்புள்ள குடிமகன் இப்போது இதைச் செய்யலாமா?
குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது பகுதியில் தொற்று உள்ளதெனில் அவரிடம் இருந்தும், அவ்விடத்திலிருந்தும் விலகியிருப்போம் என்பதே செய்ய வேண்டிய ஒரே பணியாகும். அதை அரசு செய்யும். அதில் நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையென ஒதுங்கி நிற்பதே இப்போதைக்கு சமூகப் பொறுப்பாகும். மனிதனாய் உதவிட வேண்டுமெனில், காய்கறி, பழம் வாங்க அன்பாய் உதவலாம்.
ஆக, நோயாளிகளிடம் அன்பு, சமூக அக்கறை, சமூக அமைதி காத்தல் என்பதைத் தவிர வேறு நாம் செய்வதற்கு ஏதுமில்லை.
வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியைப் பகிர்வதும் ஊடகத்திற்கான பொறுப்புணர்வுடன் செய்யப்பட வேண்டியதாகும். குறிப்பிட்ட ஒருவரை குடும்பத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பழிப்பது வெறுப்பை விதைக்கும் செயலாகும். உலகில் எந்த நாடும் இந்த நேரத்தில் இப்படிச் சிந்திக்கவில்லை.
இந்தியர் நாம் இப்படி இருந்திடலாமா?
மதவெறிக்கும், சாதிவெறிக்கும் எதிராய்ப் பேசுவது மனித உணர்வென்றும், தேச பக்தக் கடமையென்றும் கருதுகிறேன் நான்.
நீங்களும் அவ்வாறே என மனதால் நம்புகிறேன்..
செயலால் என் சிந்தனை இதைப் பகிர்கிறேன்..
கொரோனாவிலிருந்தும், மதவெறியில் இருந்தும் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வோம்.
வெறுப்பிலிருந்து விலக்கி நமது சமூகத்தைக் காப்போம்