சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தேமுதிக வெளியேறியதால் அதிமுக-வுக்கு பாதிப்பில்லை ‘‘ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி. வாக்கு வங்கி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்துப் போட்டியிடுவதில் தவறில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டு தவறாகப் பேசுவது நல்லதல்ல. கூட்டணியில் உடன்பாடு ஏற்படாமல் ஒரு கட்சியின் மீது பழி சுமத்துவது சரியல்ல’’ என்று கூறிய முதல்வர், புதிய தமிழகம் அதிமுக கூட்டணியிலிருந்து ஏற்கனவே உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டது என்றார். எத்தனை தொகுதியில் வெல்வீர்கள் எனக் கேட்டதற்கு பெரும்பான்மையாக வெற்றி பெறுவோம். எத்தனை தொகுதிகள் என்றெல்லாம் கூற முடியாது. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்றார்.