election-2019

img

பாஜக தேர்தல் அறிக்கை மீண்டும் ஒரு கலர் ஜெராக்ஸ்

ஒரு வழியாக பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. கடந்த தேர்தல் அறிக்கையிலேயே அனைத்து பொய்களையும் அள்ளி வீசிவிட்டதால் இந்த முறை புதிய பொய்களை தயாரிப்பதற்குள் அவர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. கடந்த முறை அளித்த சில வாக்குறுதிகளையே கலர் ஜெராக்ஸ் எடுத்து இந்த முறையும் தந்துள்ளனர். அதில் சில அருதப் பழசு.கடந்த முறை மக்களவைத் தேர்தல் துவங்கிய முதல் நாளன்றுதான் அறிக்கையை வெளியிட்டனர். அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டவர் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. இந்த முறை அவரும், எல்.கே.அத்வானியும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வெளியிட்டதற்காக முரளி மனோகர் ஜோஷிக்கு சீட் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு அடுத்த தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகமே. ஏனென்றால் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் ஏராளமான பொய்களை மை கொண்டு எழுதியுள்ளனர்.மளிகைக் கடை சிட்டை எழுதுபவர்கள் எடுத்தவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல பாஜக எப்போது தேர்தல் அறிக்கையை தயாரித்தாலும் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றுதான் துவங்குவார்கள். இந்த முறையும் அந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதியை கேட்டு ராமபிரானின் காதே புளித்துப் போயிருக்கும். எனக்கு கோயிலும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் என்று பாஜகவிடம் கதறிக்கொண்டிருக்கிறார் தசரதகுமாரன்.அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. வீடு என்றால் மேலோகம் என்று ஒரு பொருளும் உண்டு. இவர்கள் இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் அனைவரையும் மேலோகம் அனுப்பிவிடுவார்கள். 


கடந்த தேர்தல் அறிக்கையைப் போலவே இந்த முறையும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்படும் என்று பாஜக கூறியுள்ளது. இவர்கள் பின்பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. அதை ஒருவழியாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கொஞ்சம் கூட கூசாமல் இந்த முறையும் எழுதி வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா? விவசாயிகளின் நிலத்தை பறிக்க மாறி மாறி அவசரச் சட்டம் கொண்டுவந்தவர்கள், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற என்ன செய்தார்கள்? 


கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிக்குழு அமைக்கப்படும். கருப்புப்பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றெல்லாம் கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள். பாஜக அமைத்த அந்தப் பணிக்குழுவில் அம்பானி, அதானி, அமித் ஷாவின் மகன் மற்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மல்லையா, நீரவ் மோடி, சோக்சி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள் போலிருக்கிறது. பணிக்குழு மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. கருப்புப் பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வல்லபாய் படேல் சிலைக்கு அருகில் இடம்பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கருப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15லட்சம் டெபாசிட் செய்வோம் என்றார் மோடி. அந்தத் தொகையை செலவழிக்க முடியாமல் இந்திய குடிமக்கள் திணறிக் கொண்டிருப்பதால் இந்த முறை அதுகுறித்து எதுவும் கூறவில்லை.கடந்த முறை அளித்த தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம், விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை தருவோம் என்றார்கள். இந்த முறை விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். விவசாயிகள் அனைவரையும் விவசாயத்தை விட்டு விரட்டி அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்போகிறார்கள் போலிருக்கிறது. இவர்கள் விவசாயிகளுக்கு அல்ல, விவசாயத்திற்கே ஓய்வளித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையாக திகழ்வது வேலையில்லாத் திண்டாட்டம். ஆனால் வேலைவாய்ப்பை உறுதிசெய்வது குறித்தோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ எதுவும் கூறவில்லை. அது நம்வேலை இல்லை என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. உயர்கல்வியை மேம்படுத்த ரூ.1லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தத் தொகை முழுவதையும் ஆரம்பிக்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு வழங்குவோம் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். சில்லரை வணிகத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய கொள்கை உருவாக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம் அந்தத் துறையையே நாசம் செய்துவிட்டது மோடி அரசு. இதில் இன்னும் ஒரு தேசிய கொள்கையை உருவாக்கப்போகிறார்களாம். 


மாநிலங்களிடம் கலந்து ஆலோசித்து ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மாநிலங்களின் வரி வருவாயை வாரிச் சுருட்டிய பிறகு இனி ஆலோசிக்க என்ன இருக்கிறது. ஜிஎஸ்டியை எளிமைப்படுத்துவோம் என்றால் இந்த வரிவரம்புக்குள் வராத அனைவரையும் வேட்டையாடுவோம் என்றுதான் பொருள். வரிக்குதிரையைவிட கூடுதலான அளவுக்கு வரி போட திட்டம் போடுகிறார்கள் போலிருக்கிறது.இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே இலக்கு என்றும் பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டை கொண்டாட உள்ள 2047ஆம் ஆண்டில் இந்த இலக்கை நிறைவேற்றுவார்களாம். அதுவரை பாஜக என்ற கட்சி இருந்தால் பார்க்கலாம்.2022ம் ஆண்டு 75வது சுதந்திரம் தினம் கொண்டாடப்பட உள்ளதால் 75 முக்கிய வாக்குறுதிகளை தற்போது தந்திருக்கிறதாம் பாஜக. சுதந்திரப் போராட்டத்தோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத இவர்கள் சுதந்திரத் தினத்தையே பொய் வாக்குறுதிகள் மூலம்தான் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். மக்களிடம் இருப்பது ஒரே ஒரு வாக்குறுதிதான். அது இனி பாஜக ஆட்சி வேண்டாம் என்பதுதான்.

;