election-2019

ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி ரபேலில் பெரிய ஊழல் செய்துள்ளார்

தரங்கம்பாடி, ஏப்.13-நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக வாக்குக் கேட்டுஉரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகைமாலி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், சிங்காரவேலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிம்சன், கலைச்செல்வி, இராசையன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:ஊழலை ஒழிப்பேன் என கூறி வந்த மோடி ரபேல் விமான ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் செய்துள்ளார். ஏழை தாயின் மகன் எனக் கூறிக் கொண்டு ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றியுள்ளார். பணக்காரர்களை மாபெரும் பணக்காரர்களாக மாற்றியுள்ளார். அதனால் தான் அதிமுக ஊழல்வாதிகள் மோடிக்கு ஆதரவு அளிக்கின்றனர். அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து பேசி வந்த பாமக, இன்று தமிழக மக்கள் செழிப்பாக இருப்பதாக கூறிவருகிறது. மோடி, எடப்பாடி வீடுகளில்பணம் இருக்கிறது என புகார் அளித்தால்தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட தயாராக இருக்கிறதா? என மு.க.ஸ்டாலின் பேசினார். 

;