election-2019

img

மோடி அரசு மீது ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள் அதிருப்தி... அச்சுறுத்தல், பழிவாங்குதல் மூலம் அராஜக ஆட்சி நடத்த முயல்வதாக குற்றச்சாட்டு

புதுதில்லி:
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது நிர்வாகத் திறன் இன்மையால், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. சிறு-குறு தொழில்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்பிரச்சனைகளில் பொருளாதாரவல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு மோடி அரசு மதிப்பளிப்பது இல்லை. இதனால், ‘நாட்டை அழித்த பழி தங்கள் மீது வந்துவிடுமோ?’ என்றுபயந்து, பல்வேறு பொருளாதார வல்லுநர்கள், தங்களின் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போய் விட்டனர். மோடியின் நிர்வாக அலங் கோலத்தைச் காணச் சகிக்காத சிலர்,மறைமுகமாக மட்டுமன்றி நேரடியாகவும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஊழல்பட்டம் கட்டி, அவர்களைக் கொத்துக்கொத்தாக டிஸ்மிஸ் செய்யும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது.மற்றொரு புறத்தில், அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில், சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பதிவேடு போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம், நாட்டையும் ஒரு கொந்தளிப்பான நிலைக்கு மோடி அரசு தள்ளியிருக்கிறது.இத்தகைய மோடி அரசின் செயல்கள், நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளிடையே கடுமையான அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பது, அவர் களின் சமூகவலைத்தள கருத்துப் பகிர்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மாற்றுவதற்கான முயற்சிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை எதேச்சதிகாரமான முறையில் பழிவாங்குதல் போன்ற மோடி அரசின் நடவடிக்கைகள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருவிதமான அமைதியின்மையை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.மூடிய வாட்ஸ் ஆப் குழுவில், தனதுகருத்தை பகிர்ந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “நம்மை நாமே முட்டாளாக்க வேண்டாம்; நமக்கு இந்த அரசால் எந்தபாதுகாப்பும் இல்லை. நாட்டின் அரசியலமைப்புக்கும் கூட பாதுகாப்பு இல்லை.தற்போது இருப்பது ஒரு முதலாளி - அடிமை உறவு” என்றம் புலம்பியுள்ளார்.

மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி, ஜெர்மன்லுத்தரன் ஆயர் மார்ட்டின் நீமல்லரின்புகழ்பெற்ற கவிதை வரிகளைப் பதிவிட்டு, குமுறலை வெளிப்படுத்தியுள் ளார். அரசியலமைப்பு, நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அடித்தளத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அந்த கருத்துக்கள் அமைந் துள்ளன.ஏற்கெனவே, நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற நேரத்தில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக, மூன்றுதேர்தல் ஆணையர்களில் ஒருவரானஅசோக் லவாசா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், அசோக் லவாசா வருமான வரித்துறை மூலம் குறிவைக்கப்பட்டிப்பதையும் சிலஅதிகாரிகள் அச்சத்துடன் பகிர்ந்துள்ளனர்.

அதேபோல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறார்களா? என்பதை வேவுபார்த்து, மத்திய அரசு அவர்கள் மீதும்புலனாய்வு அமைப்புக்களை ஏவிவிடுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.முன்னாள் நிதி ஆயோக் தலைமைநிர்வாக அதிகாரி சிதுன்ஸ்ரீ குல்லர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும் அவர்கள் உதாரணமாகக் காட்டியுள்ளனர். இந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆகியோர் பழிவாங்கப்பட்டது மட்டுமன்றி, முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் அல்லது முன்னாள் மனிதவள மேம்பாட்டுச் செயலாளர்கள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் ரினா ரே போன்ற பல அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டதையும் விவாதித்துள்ளனர்.இவற்றையெல்லாம் குறிப்பிட்டுள்ளபதிவிட்டுள்ள மூத்த உயர் அதிகாரி ஒருவர், “இதுபோன்ற இடுகைகளை நான்குழுக்களில் பகிரும்போது, சில அதிகாரிகள் என்னுடன் உடன்படுகிறார்கள் என்றும், சிலர் தனிப்பட்ட முறையில்எனக்குச் செய்திகளை அனுப்புகிறார் கள், சில சமயங்களில் அவர்கள் என்னைஎச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.இவ்வாறு தங்களுக்குள்ளான மனப்புழுங்கள்களை பகிரங்கமாக அல்லாமல் மூடிய வாட்ஸ் ஆப் (OfflineWhatsapp) குழுக்கள் மூலமாக பகிர்ந்துகொள்ளும் அதிகாரிகள், தங்களை வழக்குகள், நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு அச்சுறுத்த நினைக்கலாம்; இதனால் உண்மையில் மத்திய அரசுக்குத்தான் பின்னடைவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

;