education

‘நீட்’ தேர்வைப் போல இனி ‘கியூட்’ தேர்வெழுத வேண்டும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர இந்தாண்டு முதல் நுழைவுத் தேர்வு!

புதுதில்லி, மார்ச் 22 - பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission - UGC) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்கு மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கு, இதுவரையிலும், பிளஸ் 2 மதிப்பெண்களே தகுதியாக கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு போல, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு, புதிதாக ‘கியூட்’ (CUET) என்ற ‘பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு’ (The Common University Entrance Test - CUET) நடத்தப்படும், இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில்தான் இனிமேல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திங்களன்று தில்லி யில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெக தீஷ் குமார், “2022-23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் ‘கியூட்’ தேர்வு மூலமே மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை நடை பெறும், இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12-ஆம் வகுப்பு ‘என்சிஇஆர்டி’ (National Council of Educational Research and Training - NCERT) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். ‘பிரிவு-1ஏ’, ‘பிரிவு-1பி’, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு என ‘கியூட்’ நுழைவுத் தேர்வு இருக்கும். பிரிவு 1ஏ-யில் ஆங்கிலம், இந்தி,  அசாமி, வங்காளம், குஜராத்தி, மலை யாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ்,  தெலுங்கு, உருது உள்ளிட்ட 13 மொழிகள்  இருக்கும். ‘பிரிவு-1பி’ என்பது பிற மொழி களை கற்க விரும்பும் மாணவர்களுக்கான தாக இருக்கும்.

இதன் கீழ் மாணவர்கள் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் போன்ற மொழிப் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம். ‘டொமைன் ஸ்பெசிப்’ எனப்படும் குறிப்பிட்ட பாடவாரியான ஆப்ஷனில் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். அதாவது அவர்கள் இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்க்கை பெற முடியும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த  பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘கியூட்’ தேர்வால், அனைத்து  கல்வி வாரியங்களிலும் பயிலும் மாண வர்களுக்கும், வடகிழக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ‘கியூட்’ நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் களை மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் கூட  தங்களின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும் ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.