economics

img

சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்புடைய முடிவுகளையெடுத்த முன்னாள் சிஇஓ வீட்டில் சோதனை

இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்த  தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

மும்பையிலுள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமை அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது தேசிய பங்குச்சந்தையில் முறைகேடாக பதவி உயர்வு, சம்பள உயர்வு  மற்றும் பல இடைத்தரகர்கள் பயனடையும் வகையில் பங்குச்சந்தையின் விதிமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 
அதுமட்டும் இல்லாமல் இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் ஆலோசித்து பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக சித்ரா மீது புகார் எழுந்தது. சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு மின் அஞ்சல் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில்  பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, சித்ரா ராமகிருஷ்ணனுக்கு அபராதம் விதித்தது.
அதுமட்டும் இல்லாமல் விதிமுறைகளை மீறி ஆனந்த் சுப்பிரமணியத்தை தலைமை செயல் அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
இந்நிலையில் தற்போது மும்பையிலுள்ள சித்ரா ராமகிருஷ்ணனின் இல்லத்திலும் சென்னை சோலையூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் குறித்தும், யார் பரிந்துரையில் பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றங்களை அவர் வழங்கினார் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.