தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய டிரஸ்டி அமைப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதங்களை 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப் பரிந்துரை செய்தது மாத சம்பளதாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு பிஎப் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே வைத்திருப்பதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎப் திட்டத்தின் மீதான முதலீட்டின் வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் குறைந்தாலும், இன்றும் சிறு சேமிப்புத் திட்டங்களில் அதிக லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட்டமாக இபிஎஃப் (EPF) தான் உள்ளது.
சுகன்யா சம்பிரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.6 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதம், பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம், இதனால் பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத்திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது.
ஈபிஎஃப்-ல் ஒருவர் அதிகப்படியாக வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பில் சுமார் 6.9 லட்சம் நிறுவனங்கள் உடன் 6.7 கோடி ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். மேலும் இந்த வட்டி குறைப்பின் மூலம் 350 கோடி ரூபாய் கூடுதலாக வருமானத்தை இபிஎஃப்ஓ (EPFO) பெறுகிறது.
ஒன்றிய அரசு கடந்த 40 வருடத்தில் இல்லாத வகையில் பிஎப் வைப்புக்கான வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து வெறும் 8.1 சதவீதம் என்ற குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
ஏற்கனவே அமலில் இருந்த 8.5 சதவீதம் அதாவது பழைய வட்டி விகித அடிப்படையில் 20 வருட முடிவில் ஒரு நபர் பெறும் மொத்த பிஎ பணம் 1.32 கோடி ரூபாய், ஆனால் இதுவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8.1 சதவீத வட்டி விகிதம் மூலம் ஒரு நபர் பெறும் தொகை 1.25 கோடி ரூபாய் மட்டுமே. இதன் மூலம் சுமார் 7 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.