நிதி பரிமாற்றம் தொடர்பான சைபர் குற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நாடாக வியட்நாம் இருப்பதாக சைபர் குற்றப் பாதுகாப்புக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் காஸ்பெர்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் சீனாவும், அமெரிக்காவும் முன்னணியில் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் பிரிட்டனும், ரஷ்யாவும் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 238 விழுக்காடாக அதிகரித்ததாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாம் மின்னணு பரிவர்த்தனையைச் செய்பவராக இருந்தால், நிச்சயமாக ஒருமுறையாவது இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருப்போம் என்று சொல்லும் அளவிற்கு குற்றங்கள் அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தெற்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் பெரும் முன்னேற்றத்தைக் கண்ட நாடாக உள்ளது. வியட்நாம்தான் நிதிப் பரிமாற்றங்களில் ஏற்படும் மோசடிகளைத் தடுப்பதற்கு தனியான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஸ்பெர்ஸ்கி மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரிகளில் ஒருவரான இயோ ஸ்டாங் டியோங், "தெற்கு ஆசியப்பகுதியில் உள்ள நாடுகளில் வியட்நாமில்தான் வங்கிகள் தொடர்பான முறைகேடுகள், பணம் வழங்கும் முறைகளில் தவறுகள் மற்றும் ஆன்லைன் கடைகளில் நடக்கும் மோசடிகள் போன்றவை மிகக்குறைவாக இருக்கின்றன" என்கிறார்.
மோசடி விகிதங்களில் பிலிப்பைன்சில் 64.03 விழுக்காடும், தாய்லாந்து 56.35, சிங்கப்பூரில் 51.6, மலேசியாவில் 46.77, இந்தோனேசியாவில் 40.87 என்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வியட்நாமில் 26.36 விழுக்காடு மட்டுமே நடந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் மின்னணு பரிவர்த்தனை உலகம் முழுவதும் அதிகரித்ததைப் போன்றே வியட்நாமிலும் அதிகரித்தது. மோசடிகளும் அதிகரித்தன. பெரிய அளவில் இயங்கி வரும விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பேபால் உள்ளிட்ட நிறுவனங்களின் போலியான பக்கங்களை உருவாக்கி மோசடிகள் நடந்தன.
2025 ஆம் ஆண்டில் அலைபேசி வாயிலாக நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்வது வியட்நாமில் 300 விழுக்காடு அளவிற்கு அதிகரித்து விடும் என்று பேக்பேஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்னணு பொருளாதாரமாக வியட்நாம் மாறி வருவதே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள். இதனால் மோசடிகளும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அத்தகைய மோசடிகளைப் பெரும் அளவில் தடுப்பதற்கான எற்பாடுகள் வியட்நாமின் அரசு, நிதித்துறை மற்றும் வங்கித்துறை ஆகியவை மேற்கொள்கின்றன என்று காஸ்பெர்ஸ்கியின் இயோ ஸ்டாங் டியோங் கூறுகிறார்.