districts

img

100 ஏக்கர் நெல் பயிரைத் நாசமாக்க முனையும் தனியார் நிறுவனம்

செங்கல்பட்டு, மார்ச் 11 -  மதுராந்தகம் வட்டம், கள்ளபிரான்புரம் ஊராட்சிக்குட்பட்ட  மதுரா வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி விவசாயம் செய்யாமல் தரிசாக போட்டுவைத்திருந்தது. அதனருகில் இருக்கும் சுமார் 100 ஏக்கர் நிலத்தில் கிராம விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் நிலத்தையும் விலைக்கு வாங்க அந்த நிறுவனம் தொடர்ந்து நிர்பந்திக்கிறது. 100 ஏக்கரில் பயிர், கதிர் வைத்து ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக விவசாயம் செய்யப்படாமல் தரிசாக கிடந்த 150 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம்தற்போது விவசாயம் செய்ய உழவுப் பணிகளை செய்து வருகிறது. இது நடவு செய்யும் காலம் இல்லாததால்  அடாவடித் தனமாக தனியார் நிறுவனம் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் தற்போது பயிர் நடவு செய்ய ஆரம்பித்ததால்  அந்த நிறுவனம் வாங்கியுள்ள நிலத்திற்கு நடுவே தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்கள்  அறுவடை செய்ய முடியாமல் போகிறது இதனால் தொடர்ந்து விவசாயம் செய்துவரும் விவசாயிகளை நட்டப்படுத்தி அவர்களிடம் உள்ள நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க  அந்த தனியார் நிறுவனம் சூழ்ச்சி செய்வதாக விவசாயிகள் குற்றம் சாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவாயிகள் சங்கத்தின் சார்பில்  மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த மாதம் 28ம் தேதி விவசாயிகள் கோரிக்கை மனுவினை வழங்கியிருந்தனர். இதில் அந்த நிறுவனம் விவாயம் செய்ய வேண்டுமானால் கிராம விவசாயிகள் அனைவரும விவசாயம் செய்யும் காலத்தில் பயிர் நடவு செய்திட வேண்டும், அவர்கள் விவசாயம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. அடாவடித் தனமாக தற்போது விவசாயம் செய்கின்றனர். மேலும் 100 ஏக்கர் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராகி வரும் நெல்லை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில்  தனியார் நிறுவனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  கள்ளபிரான்புரம் கிராம நிர்வாக அலுலவர் அலுவலகம் முன்பு (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் ப.சடகோபன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்டச் செயலாளர் ஜி.மோகனன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், சிஐடியு சுமைப்பணி சங்க கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டச் செயலாளர் வி.சசிக்குமார், விவசாயிகள் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.