districts

img

வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு, மே 28- மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ரயில் நகர், ராஜீவ் காந்தி நகர் மக்கள் தங்களது குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி 4ஆவது வார்டுக்குட்பட்ட நின்னகாட்டுர், ரயில்நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 7 குடியிருப்புகள் வருவாய்த்துறை மூலம் நீர் நிலையில் இருப்பதாகக் கூறி இடிக்கப்பட்டது. மீதமுள்ள குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள் காலி செய்ய வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் குடியிருப்புகளை அகறற எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று( மே 27)  வருவாய் துறை மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் அப்பகுதி உள்ள குடியிருப்புகளில் மின்சாரம் பொருத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும், குடிநீர் குழாய் இணைப்புகளை கணக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சியை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாததால், சுமார் 500க்கும் மேற்பட்டோர்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். இதனால் 10 கிலொ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசுவதாகவும், குடியிருப்புகளை அகற்றா  வண்ணம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு பரிந்துரை  செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.