districts

img

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் முன்னறிவிப்பின்றி ரத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற விவசாயிகள்

முன்னறிவிப்பின்றி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்  தலைமையில் வெள்ளியன்று (டிச 24) காலை 11 மணிக்கு நடைபெறும் என மாவட்ட வேளாண்துறை தெரிவித்திருந்தது. இதுகுறித்து செய்தி குறிப்பும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து  ஏராளமான விவசாயிகள் விவசாய பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தங்களின் குறைகளை கூற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். காலை 11 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம் 12 மணி வரையிலும் துவங்காமல் இருந்ததால் காத்திருந்த விவசாயிகள் கூட்டம் நடைபெறுமா  நடைபெறாத என்ற குழப்பத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் வேறு தேதிக்கு மாற்றம் செய்து இருப்பதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெறாதது அறிந்த விவசாயிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

 

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மோகனனிடம் கேட்டபோது தற்போது மும்முரமாக விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாய பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வந்தால் கூட்டம் ரத்து செய்ததை கூட சொல்வதற்கு எவரும் இல்லை இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். கூட்டம் நடைபெறுவது குறித்து செய்தித்தாள்களின் தகவல் தெரிவிக்கும் நிர்வாகம் கூட்டம் ரத்து செய்ததை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

மேலும், இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குனரிடம் கேட்டபோது நிர்வாக காரணங்களால் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கூட்டத்தை ரத்து செய்து வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது மீண்டும் கூட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு முறையாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என தெரிவித்தார்.