செங்கல்பட்டு,ஜன.5- செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து செங்கை புத்தக திருவிழாவை டிச.28 முதல் ஜன4 வரை நடத்தின. மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தக்ககண்காட்சியை சுற்றிப்பார்த்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 50 அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பள்ளிமாணவர்களுக்கு அரையாண்டுதேர்வு விடுமுறை என்பதால், ஏராளமானவர்கள் கண்காட்சிக்கு வந்திருந்தனர். புதன் கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பேசிய ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத், செங்கை புத்தக திருவிழா 2022, மாநிலத்தில் எங்கும் இல்லாத வகையில் 15,500 மாணவ- மாணவிகள் மற்றும் 10,100 பொது மக்கள் ஆக மொத்தம் 25,600 பேர் புத்தகத் திருவிழாவினை கண்டு பயன் பெற்றுள்ளனர். புத்தகவிழாவில் பங்கு பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் ரூ 100 மதிப்புள்ள டோக்கன் வழங்கப்பட்டு அதைக் கொண்டு மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகத்தை வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களும் பயன்பெற்றனர். இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.10 லட்சம் ஆகும். புத்தக கண்காட்சியில் ரூ.15.5 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் ரூபாய் 100 மதிப்புள்ள டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு 10ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் தினம் தோறும் போட்டிகள் முடிவுற்றதும் வழங்கப்பட்டன. இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் சார்ந்தும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் மாவட்டத்தில் உள்ள 75 கிராமப்புற நூலகங்களுக்கு ரூ.10ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினர். இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அபிலாஷா கௌர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, அரசு அலுவலர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் சென்னை பாரதியார் மன்றத்தின் நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.