வேலூர், ஜூலை 28 - வேலூர் மாநகராட்சி தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் விமல்ராஜ் வாகனத்தில் சென்றபோது அடிபட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பள்ளியில் பயிலும் தனது சகோதரர் அபிஷேக்குக்கு மதிய உணவு கொண்டு சென்றுள்ளார். அப்போது, உதவி தலைமை ஆசிரியர் நரேந்திரன், விசாரித்தபடி விமல்ராஜை விரட்டியுள்ளார். இதனால் பள்ளியின் மேல் மாடிக்கு ஓடினார். மாணவரை மாடியில் வைத்து ஆசிரியர் பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் அருகில் இருந்த மரத்தை பிடித்து இறங்க முயற்சித்த போது வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தான். இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதுகு தண்டில் பிளேட் வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விசிக பகுதிச் செயலாளர் ரபேல் பிரபுராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம், வேலூர் தெற்கு வட்டச் செயலாளர் எஸ்.செல்வி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன், கற்பி அமைப்பு பாலா, வழக்கறிஞர்கள் அருண்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட கல்வித்துறையும் இதற்கு காரணமான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.