வேலூர்,மார்ச் 26- தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வேலூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகம் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் பலர் பங்கேற்றனர். பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். மேகதாது விவகாரத்தில் கர்நாடகா எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதேபோல் நமது நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக இருக்கிறோம்.
கீழே இருக்கிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் உத்தரவு கொடுத்தி ருக்கிறார்கள். தண்ணீர் ஓடி வந்தால் மேலே இருக்கிறவர்களுக்கு சொந்த மில்லை என உச்ச நீதிமன்றம் கூறி விட்டது என்றார். எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக அரசுக்கும் அது தெரியும். உச்சநீதிமன்றம் சொன்னால் என்ன, நாங்கள் செய்வோம் என்றால் எப்படி? உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது, அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? ஒன்றிய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவை யெல்லாம் பெரிய அரசி யல் கேள்வியாக எழுப்பக்கூடிய விவ காரமாக உள்ளது. அவ்வளவு சுலப மாக ஒன்றிய அரசு சாய்ந்துவிடாது என்று கருதுகிறேன் என்றும் அவர் கூறினார்.