அருப்புக்கோட்டையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனியார் செவிலியர் கல்லூரி நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தெற்குத்தெருவில் தனியார் செவிலியர் மற்றும் எலெக்ட்ரோ ஹோமியோபதி கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில் சுமார் 300க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில், இக்கல்லூரி நிறுவனர் ஜான் கிரேஸ், இவர் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கல்விக்கட்டணம் கட்ட தாமதாகிவரும் மாணவிகள் அல்லது கட்டணம் கட்ட இயலாத மாணவிகளை மட்டும் தனியாக அழைத்து ஆபாசமாகப்பேசி, பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
மேலும் அலைபேசியிலும் அம்மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாகப்பேசியும் ஆபாசப் போட்டோக்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வெகுண்டெழுந்து கல்லூரி மாணவிகள், சனியன்று காலை, வகுப்புகளைப் புறக்கணித்ததோடு, கல்லூரி நிறுவனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவிகள் கூறுகiயில், தங்கள் அனைவரையும் வேறு கல்லூரிகளில் படிப்பைத்தொடர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்த நிறுவனர் ஜான் கிரேஸ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன்ர்.
அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, வட்டாட்சியர் அறிவழகன், நேரில் வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்பு, கல்லூரி நிறுவனர் ஜான் டேஸ்வின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கான எண், தேதி ஆகியவற்றை காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
இதுதொடர்பாக அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களான சுபாஷ் மற்றும் சலீம் ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், இக்கல்லூரியில் சுமார் 400 பேர் வரை படிக்கிறோம். இதில் மாணவிகளுக்கு குறைவான அளவில் மட்டுமே கழிவறைகள் உள்ளன. மாணவர்களுக்கு கழிவறை வசதி இல்லை. மேலும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைக் கட்டடவசதி இல்லாமலே இக்கல்லூரி செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் இக்கல்லூரி மூடப்பட்டால் அதையடுத்து நாங்கள் பிற கல்லூரிகளில் எங்களது இதேபடிப்பைத் தொடர்வதற்கு அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தனர்.
முன்னதாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத் தலைவர்கள் எஸ்.காத்தமுத்து, தமிழ்செல்வராஜ், எம்.கணேசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை ஆகியோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில், மாணவ, மாணவிகள் அரசுக் கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.