விருதுநகர் அருகே பட்டாசுக் கடையில் பதுக்கி வைகப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
பின்பு, காருக்குள் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 5 பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இருவரும், மதுரை மீனாட்சி புரத்தை சேர்ந்த சிவசாமி மற்றும் சதீஷ் பாண்டியன் என்பது தெரிய வந்தது.
மேலும், ஆமத்தூர் அருகே உள்ள கவலூர் கிராமத்தில் ஒரு பட்டாசு கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இதில், கவலூர் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசுக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 23 லட்சத்து 50 ஆயிரமாகும்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், சிவகாசி பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் என்பவரிடமிருந்து பட்டாசுக் கடையை குத்தகைக்கு பெற்று கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.