நெமிலி, அக். 26- ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து 36 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவு கடந்த 2 நாட்களாக அதிகமாக செல்வதால் கர்ணாவூர் ஆலப்பாக்கம் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தரைப் பாலத்திற்கு மேலே 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகனத்திலும், சைக்கிளிலும் செல்பவர்களும் கடும் அச்சத்தோடு பாலத்தை கடந்து செல்கின்றனர். இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை அதிகமாக தண்ணீர் சென்றால் பனப்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் செல்பவர்கள் 12 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் தரைப் பாலத்தை கடந்த போது 2 வாலிபர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். அதேப் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடை பெறுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.